தமிழக ஆளுநர் அர்லேகர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. ”இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய அரசு உத்தரவுப்படி வந்தே மாதரம் முதலில் பாடப்படும்; 2-வதாக தேசிய கீதம்; 3-வதாக மட்டுமே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும்” என்று பல்கலைக் கழக துணை வேந்தர் சந்திரசேகர் அறிவித்தது பெரும் சர்ச்சையானது.
தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திலேயே அந்த பாடல் அவமதிக்கப்படுவதாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனிடம் பல்வேறு இயக்கத்தினர் மனு கொடுத்தனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் அர்லேகர் இன்று வருகை தந்துள்ளார். ஆனால் இவ்விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் திடீரென பங்கேற்க மாட்டார் என பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி இருக்கிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கும் ஆளுநர் அர்லேகருக்கும் சுமூகமான உறவு நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பதால் மோதல் தொடங்கி இருக்கிறது.
