பொருளாதார வல்லுநரும் மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் முதல்வர் விஜய், தமிழக அரசின் வருவாயை பெருக்கும் குழுவை அமைத்துள்ளார்.
தமிழக அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான குழுவில்
- கே.பி. கிருஷ்ணன்
- அர்பிந்த் மோடி
- நஜிப் ஷா (ஐ.ஆர்.எஸ்., ஓய்வு)
- எம்.ஏ. சித்திக், ஐ.ஏ.எஸ்
- சுரேஷ் பாபு உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவானது,
- மாநிலத்தின் மொத்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும்.
- வரி ஏய்ப்பு மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைத் சரிசெய்தல்
-மதுபான விற்பனை மீதான ஒழுங்குமுறை மற்றும் வரிவிதிப்புக் கொள்கைகளில் அவசியமான மாற்றங்களைக் கொண்டுவருதல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம், அரசுக்கான வருவாயை கணிசமாக அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும் பரிந்துரைக்கும்.



மாண்டேக் சிங் அலுவாலியா யார்?
இந்த குழுவின் தலைவரான மாண்டேக் சிங் அலுவாலியா, பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்த காலத்தில் மத்திய அரசின் திட்டக் குழு துணை தலைவராக இருந்தார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினராக பணியாற்றியவர். சர்வதேச நிதி அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர். 2011-ம் ஆண்டு மாண்டேக் சிங் அலுவாலியாவுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது.
இதர உறுப்பினர்கள்

கே.பி. கிருஷ்ணன்
National Council of Applied Economic Research- தேசிய பொருளாதார பயன்பாட்டு ஆராய்ச்சி கவுன்சிலின் (NCAER) பொருளாதாரத் துறைத் தலைவர், டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தின் (CPR) கவுரவப் பேராசிரியர்

அர்பிந்த் மோடி
வரிச்சட்ட வல்லுநர், மத்திய அரசின் வருமான வரிச் சட்டத்தை மாற்றிமைப்பதற்கான பணிக்குழுவின் (2017-18) ஒருங்கிணைப்பாளர், அனைத்துலக நாணய நிதியத்தின் (IMF) நிதி விவகாரத் துறையின் பொருளாதார வல்லுநர். பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு ஆலோசகராக பணிபுரிந்துள்ளார்.

நஜீப் ஷா, ஐ.ஆர்.எஸ். (ஓய்வு)
மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய (CBEC) முன்னாள் தலைவர், மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள நவ ஷேவா துறைமுகத்தின் சுங்க ஆணையர், கூடுதல் தலைமை இயக்குநர் (வரி ஏய்ப்பு தடுப்பு பிரிவு, மும்பை), மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் இணைச் செயலாளர்.

எம்.ஏ. சித்திக், ஐ.ஏ.எஸ்.
அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை, தமிழ்நாடு அரசு

டாக்டர் எம். சுரேஷ் பாபு MIDS
மெட்ராஸ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS) இயக்குநர்.
திமுக ஆட்சியில்..
முந்தைய திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில்
- நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் எஸ்தர் டஃப்லோ (Esther Duflo)
- இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்
- மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
- சர்வதேச பொருளாதார வல்லுநர் ஜீன் த்ரேஸ், எஸ். நாராயணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அப்போது தமிழக அரசின் திட்டக் குழு செயல் துணைத் தலைவராக பொருளியல் அறிஞர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
