மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் புகைப்படத்துடன் கூடிய தங்க மூக்குத்திகள் வாக்காளர்களுக்கு வழங்க குவித்து வைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை பெண் வேட்பாளராக கவிதா கல்யாணசுந்தரத்திற்கு திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் டி.ஆர். சண்முகசுந்தரம் ‘பக்கெட்’ சின்னத்தில் களமிறங்கியுள்ளார்.
இவர் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இம்முறை மீண்டும் சீட் கேட்டபோதும் திமுக தலைமையகம் வாய்ப்பு வழங்காததால், கட்சியிலிருந்து விலகி சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், இரு திராவிடக் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு கட்டங்களிலான பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வந்த டி.ஆர். சண்முகசுந்தரம் வீட்டில் திங்கள்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பணமோ, வேறு பொருட்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அவரது புகைப்படத்துடன் தங்க மூக்குத்தி அடங்கிய பரிசுக் கூப்பன்கள் தயாராக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பெண் வாக்காளர்களை கவரும் நோக்கில் இந்த மூக்குத்திகள் ஒரே இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் அந்த காட்சிகள் பரவி வருகின்றன.
மேட்டுப்பாளையம் தொகுதி தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக பணத்திற்கு பதிலாக தங்க மூக்குத்தி வழங்கி வாக்காளர்களை கவர திட்டமிட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
