உதகையில் ஆளுநர் ரவி இன்று (ஏப்ரல் 25) ஏற்பாடு செய்துள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். Vice Chancellors boycott Governor
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம், தமிழக அரசுக்கு தான் உள்ளது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் துணை வேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்தநிலையில், உதகையில் இன்றும் நாளையும் (ஏப்ரல் 25, 26) பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் அறிவித்திருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இதுதொடர்பாக விளக்கமளித்த ஆளுநர் மாளிகை, தமிழக அரசுடன் அதிகாரப் போட்டி நடத்துவதற்காக துணை வேந்தர் மாநாட்டை நடத்தவில்லை என்று தெரிவித்தது.
இந்தநிலையில், உதகையில் இன்று துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை, தமிழக அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 8 துணை வேந்தர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்றிருப்பதாக தெரிகிறது.
ஆளுநர் கூட்டிய மாநாட்டை துணை வேந்தர்கள் புறக்கணித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக அமைந்துள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. Vice Chancellors boycott Governor
