தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயற்குழு கூட்டம் வருகிற மார்ச் 28-ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது. Velmurugan meets Mk Stalin
கடந்த வாரம் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சபாநாயகரின் இருக்கைக்கு எதிரே சென்று முழக்கங்களை எழுப்பினார்.
அப்போது அவருக்கு எதிராக அமைச்சர் சேகர்பாபு கடுமையான சில வார்த்தைகளை கூறினார். இதற்கு பதிலடியாக வேல்முருகனும் சேகர்பாபுவுக்கு எதிராக கேள்விகளை கேட்டார்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் எழுந்து வேல்முருகன் வரம்பு மீறுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.

திமுக கூட்டணி கட்சி தலைவர் ஒருவருக்கும் திமுகவின் அமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த மோதல், அதில் முதலமைச்சர் செய்த தலையீடு ஆகியவை அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்படுத்தின.
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வேல்முருகன் சட்டமன்றம் செல்லவில்லை. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து நேற்று (மார்ச் 24) தான் வேல்முருகன் சட்டமன்றம் சென்றார்.
காலையிலேயே சபை தொடங்கும் முன்பே சபாநாயகர் அறைக்கு சென்றிருந்தார் வேல்முருகன். அங்கே அமைச்சர் வேலுவும் இருந்தார்.
திமுக கூட்டணிக் கட்சிகளின் விவகாரங்களை கையாள்கிறவரான அமைச்சர் வேலு, சபாநாயகர் அறையிலேயே வேல்முருகனிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்.
அதன்பிறகு சட்டமன்றத்தில் இருக்கும் முதலமைச்சர் அறைக்கு சென்றார் வேல்முருகன்.
முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேல்முருகன் தன்னுடைய தரப்பு விளக்கங்களை கொடுத்தார். முதலமைச்சரும் சபையில் அன்று நடந்தது பற்றி குறிப்பிட்டு, ‘கோவத்த குறைச்சுக்கோங்க. உங்க மேல எனக்கு உரிமை இல்லையா?’ என்று கேட்டிருக்கிறார்.
அதன் பிறகு வேல்முருகன் முதலமைச்சர் அறையில் இருந்து வெளியே வந்து சட்டமன்றத்தில் கலந்து கொண்டார். இத்தகைய சூழ்நிலையில்தான் 28ஆம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. Velmurugan meets Mk Stalin