தமிழக அமைச்சரவையில் விசிக பங்கேற்றுள்ள நிலையில் திமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையில், விசிக பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சிந்தனை செல்வன், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக
பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப்பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியை பரிந்துரைத்த தலைவருக்கு நன்றி.
இந்த தருணத்தில் இந்த துறை சார்ந்தும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.
எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன்.
இந்த சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன்.
யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் என தலைவர் திருமாவளவன் விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்பார்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம்.
இந்த சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன்.
தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன்.
மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துகள்.
கடந்த 2021 – 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளும் , சாதனைகளும்.
- எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
- அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில்
SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. - ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதை போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- SC/ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy)
பெரும் வகையில் (அதிகபட்சம் 1.5 கோடி )
ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். - சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
- பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன.
- மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது.
- திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் வகையில் அவர்களுக்கான தொழில் முனைவோர் மாநாடு ( TN BEAT ) சென்னை trade centre ல் கடந்த மூன்று ஆண்டுகளாய் மிக வெற்றிகரமாக நடந்து வருகிறது.
- கடந்த பல ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பதிவான பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடிச்சமூகங்களின் மீதான சாதிய வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளின் அடிப்படையில் வன்கொடுமைக்கு பலியான குடும்பங்களின் வாரிசுதாரர்கள் கண்டறியப்பட்டு
சுமார் 500 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. வேலை பெற வயது தகுதி இல்லாதோருக்கு மாதம் 5000/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. - வன்கொடுமையில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு வந்த தீருதவி தொகை எட்டு லட்சத்தோடு தமிழ்நாட்டில் மட்டும் மாநில அரசின் பங்களிப்பாக நான்கு லட்சம் சேர்த்து மொத்தம் 12 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இது இந்திய மாநிலங்களில் முன்னுதாரணமானது.
- பட்டியல் வகுப்பார் பழங்குடியினர் குடியிருப்புகளில் உள்ள கிராமப்புற கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள அறநிலையத்துறையால் வழங்கப்பட்ட தொகை ஒரு லட்சம் என்பது இரண்டு லட்சமாக உயர்வு
- தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊதியம் நமது வேண்டுகோளையடுத்து 3600 லிருந்து 5000 மாக உயர்த்தப்பட்டது.
- ஆதிதிராவிடர் நல விடுதிகளின் பழைய கட்டுமான வடிவம் முற்றிலும் மாற்றப்பட்டு நவீன கட்டமைப்பு வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர் உணவு மானியம் 300 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட்டது. மேலும் விடுதிகளின் பெயரும் சமூகநீதி விடுதிகள் என பெயர் மாற்றம் செய்யப்படுள்ளன.
- ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாள் என அரசு விழாவாக அறிவிப்பு
- சென்னையில் திராவிடப் பேரொளியை பண்டித அயோத்திதாசர் மணிமண்டபம் திறப்பு
- சிதம்பரத்தில் மறைந்த தலைவர் அய்யா எல்.இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம்
- சென்னை நந்தனத்தில் 50 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் நவீன எம் சி ராஜா கல்லூரி மாணவர் விடுதி
- அச்சிறுப்பாக்கத்தில் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் கிடந்த மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் தற்பொழுது பொலிவுடன் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- பரமக்குடியில் மாவீரன் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறப்பு.
- சிவகங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னை குயிலி க்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
- ஆதித்தமிழ் குடிகளின் வசிப்பிடத்தை இழிவுபடுத்தும் காலனி என்ற சொல் அரசு ஆவணங்களிலிருந்து நீக்க அரசாணை.
- காஞ்சியில் பன்னாட்டு பௌத்த பண்பாட்டு மையமும், மதுரையில் சமணப் பண்பாட்டு மையமும் நிறுவிடவும் அரசு அறிவிப்பு
- இசுலாமியர்களின் மெக்கா பயணம் , கிறித்துவர்களின் ஜெருசலேம் பயணம் போல அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளில் மேற்கொள்ளப்படும் நாக்பூர்-தீட்சபூமி பயணமும் புனிதப்பயணமாக ஏற்கப்பட்டு அப்பயணம் மேற்கொள்வோருக்கு அரசு மானியம் வழங்கிட அரசாணை.
இவற்றை பதிவிடுவது கடந்த பாதையை நினைவூட்டவும் இழுத்து வந்த தேரை முன்நோக்கி நகர்த்த வேண்டிய வரலாற்றுக்கடமையை பணிவுடன் சொல்லவுமே” என தெரிவித்துள்ளார்.
