விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருமாவளவன் பிறந்த நாளான நேற்று ஆகஸ்ட் 17-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் விசிகவின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு காலை முதலே சாரை சாரையாக தமிழ்நாடு முழுவதும் இருந்தும் விசிக தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் வருகை தந்தனர். இந்த மாநாட்டுக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்த நிலையில் நேற்று அப்பகுதியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இம்மாநாட்டின் தொடக்கத்தில் கையில் சுடர் ஏந்தியபடி தொண்டர்களுக்கு நடுவே நடந்து வந்து மேடையேறினார் திருமாவளவன். மேடையிலும் நூற்றுக்கணக்கான விசிகவினர் நின்றதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. மேடையேற முயன்ற தொண்டர்கள் கொத்து கொத்தாக மேடையில் இருந்து சரிந்து விழுந்தனர்.
மேடையில் இருந்தவர்களை அப்புறப்படுத்த முடியாமல் திருமாவளவனும் விசிக நிர்வாகிகளும் திணறினர். இம்மாநாட்டுக்கு தவெக தலைவரும் முதல்வருமான விஜய் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை வாசித்தார் திருமாவளவன்.

இந்த மாநாட்டில், அரசமைப்புச் சட்டம், கல்வி, சுகாதாரம், ஆளுநர், கனிமவளம், தமிழீழம், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 13 தலைப்புகளில் மொத்தம் 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில் பேசிய திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணி தொடரும் என அறிவித்தார். அத்துடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இனி ஆளும் கட்சியாக வளர வேண்டும் எனவும் சூளுரைத்தார் திருமாவளவன்.

அதே நேரத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், திருமாவளவன் தமது மாநாட்டு உரையை முழுமையாக பேச முடியாமல், சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
தவெக கூட்டணி தொடரும்
இம்மாநாட்டில் தொல். திருமாவளவன் பேசியதாவது:
இந்த மாநாட்டின் அழைப்பை ஏற்று வருகை தந்த… அனைவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். தோழர்களே… விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தி என்பதை இம்மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

கட்டுக்கடங்காமல் இங்கே அரங்கத்தில் இருக்கிற கும்பலை விடவும் கூட்டத்தை விடவும் சிறுத்தைகளை விடவும் வெளியிலே லட்சக்கணக்கான சிறுத்தைகள் திரண்டிருக்கிறார்கள். உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்கிற வகையில் நான் உங்களிடையே நீண்ட நேரம் பேச விரும்பியும், இந்த இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன்.
என்னுடைய அழைப்பை ஏற்று வருகை தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, அனைவரும் பாதுகாப்பாக கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாம் இப்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். இனி வரும் காலத்தில்… விடுதலை சிறுத்தைகள் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வளர வேண்டும்.
இத்தனை காலம்… இத்தனை காலம் ஆளுங்கட்சியோடு நாம் கூட்டணி வைத்தோம். திமுக ஆளுங்கட்சி, அதிமுக ஆளுங்கட்சி, காங்கிரஸ் ஆளுங்கட்சி, இன்றைக்கு ஆளுகிற முதலமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களோடு நாம் கூட்டணி வைத்திருக்கிறோம்..
விடுதலை சிறுத்தைகளும் தமிழக வெற்றிக் கழகமும் இனி இந்த களத்தில், தமிழ் அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும். விடுதலை சிறுத்தைகளும் ஆளுங்கட்சியாக பரிணமிக்கும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
தேசிய கீதம்
விசிகவின் இந்த தமிழ்த் தேசிய மாநாட்டின் இறுதியில், நாட்டின் ‘தேசிய கீதம்’ இசைக்கப்பட்டது.
