தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செப்டம்பர் 29) கரூர் வருகை தந்துள்ளார்.
கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடிகர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
கரூர் துயரத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
மேலும் “தமிழ்நாட்டின் கரூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும்” என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இந்த பின்னணியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கரூர் வருகை வந்தார். கரூரில் விஜய் கூட்டம் நடைபெற்ற, 41 பேரை பலி கொண்ட வேலுச்சாமிபுரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார். அவரிடம் போலீஸ் அதிகாரிகள், கூட்ட நெரிசல் சம்பவம் பற்றி விவரித்தனர்.
மேலும் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூறினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
