மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. இதனையடுத்து பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள், தாங்களே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் அணி திரண்டனர். இந்த அணியையே உண்மையான மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சியாகவும் சபாநாயகர் அங்கீகரித்தார்.
இதேபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை எம்.பி.க்கள், திரிபுராவில் மிக சிறிய கட்சி ஒன்றில் இணைந்ததாக அறிவித்துவிட்டனர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜினகர் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான அணியும் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அணியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் புல்வெளியில் இரட்டை மலர்கள் சின்னத்துக்கு உரிமை கோரின.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இரு அணிகளும் முறையிட்ட நிலையில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரு குழுக்களும் இடைத்தேர்தலில் தனித்தனி பெயர் மற்றும் தனித்தனி சின்னங்களுடன் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
