திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தனது பெயரை “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” என அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு இலக்கியவாதியாக செயல்பட்ட போது ‘கனிமொழி’ என்றே அறியப்பட்டார். அரசியலுக்கு வந்த பின்னர் கனிமொழியின் பெயரில் தந்தை கலைஞரின் பெயரும் சேர்க்கப்பட்டு ‘கனிமொழி கருணாநிதி’ என அழைக்கப்பட்டார்.

தற்போது, தாயார் ராஜாத்தி அம்மாளின் பெயரையும் கனிமொழி தனது பெயரில் சேர்த்துள்ளார். இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதி நாளிதழில் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ அறிவிப்பில், “1968 ஜனவரி 5-ஆம் தேதி சென்னையில் பிறந்த கனிமொழி கருணாநிதி, இனி ‘கனிமொழி ராஜாத்தி கருணாநிதி’ (Kanimozhi Rajathi Karunanidhi) என்ற பெயரில் அறியப்படுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தந்தை கலைஞர் பெயருடன், தாயார் ராஜாத்தி அம்மாளின் பெயரையும் இணைத்து ‘கனிமொழி ராஜாத்தி கருணாநிதி’ என தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.

நாடாளுமன்ற குறிப்புகளிலும் அதிகாரப்பூர்வமாக கனிமொழியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
