சோபா வந்தவுடன் சிலர் திமுகவை விட்டுவிட்டு சென்று விட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் திமுக தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா இல்ல திருமண விழா இன்று (ஜூலை 5) நடைபெற்றது.
இதில் திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘1989-ல துறைமுகம் தொகுதியில் நம்முடைய கலைஞர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது கலைஞரை எதிர்த்து அதிமுக சார்பில் நின்ற வேட்பாளர் துறைமுகம் காஜா. கலைஞர் வெற்றி பெற்றதும் வாக்கு எண்ணிக்கை முடியும் சமயத்தில் துறைமுகம் காஜா, கலைஞருக்கு மாலை போட்டு வாழ்த்து தெரிவித்தவர். அதன் பிறகு திமுகவிலும் இணைந்தார்.
கலைஞரால் தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இன்றைக்கு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்றார்.
மேலும் அவர், ”இந்த விழாவில் இஸ்லாமியப் பெருமக்கள் பலபேர் கலந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சில பேர் சோபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டு போய்விட்டார்கள்.
ஆனால் நீங்கள் அத்தனை பேரும் என்றைக்கும் கழகத்தோடு உறுதியாக நிற்போம் என்று சொல்லி வந்திருக்கிறீர்கள்.
இஸ்லாமியர்களுக்கும் கழகத்திற்குமான அந்த உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. யார் என்ன சொன்னாலும், எந்த அவதூறுகளைப் பரப்பினாலும், சிறுபான்மை மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கழகம் என்றைக்குமே ஒரு காவல் அரணாக இருக்கும். நிச்சயம் உங்களோடு நம்முடைய தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகமும் நிற்கும் என்று கூறிக்கொண்டு, இப்பொழுது ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த அரசியல் பேரிடர் காலத்திலேயும் நம்முடைய தமிழ்நாட்டை, திராவிட முன்னேற்றக் கழகமும் தலைவர் அவர்களும் நிச்சயம் உங்களுக்காக நின்று காப்போம், நாட்டை மீட்போம் ” என்று கூறினார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை எதிர்க்கட்சியினர் சோபா மாடல் ஆட்சி என்று விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
