எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வழக்கை மதிய உணவு இடைவெளிக்கு பின் விசாரிப்பதாக நீதிபதி இளந்திரையன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது, முதலமைச்சர் விஜய்யை விமர்சித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) கைது செய்யப்பட்டார். அவரை தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ”முதலமைச்சர் அல்லது நடிகை உட்பட எந்தவொரு நபருக்கும் எதிராகத் தான் எவ்வித அவதூறான கருத்துக்களையோ அல்லது கண்ணியமற்ற அறிக்கைகளையோ தெரிவிக்கவில்லை. எந்தவொரு பெண்ணின் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையிலான வார்த்தைகளையோ அல்லது சைகைகளையோ செய்யவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக சார்பில் முறையிடப்பட்ட நிலையில், 12 மணி வரை உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறி விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது உதயநிதி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட பல திமுக வழக்கறிஞர்கள் ஆஜராகினார்கள்.
தஞ்சாவூர் காவல்துறை சார்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ”மனுதாரரை போலீஸ் கைது செய்துவிட்டது” என்று தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றக் காவலில்அடைக்கப்படுவதற்கு முன்பாக, நீதிமன்றம் முன் ஜாமீன் மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் வழக்கு ஆவணங்கள் இன்னும் வரவில்லை. வந்தவுடன் உதயநிதி ஸ்டாலின் முன் ஜாமீன் மனுவை எடுக்கிறேன் என்று கூறிய நீதிபதி மற்ற வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.
பின்னர் மதிய உணவு இடைவேளை நெருங்கியதால், பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிப்பதாக நீதிபதி இளந்திரையன் கூறினார்.
