“இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை” என்று தமிழக சட்டசபையில் சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ. கருப்பையா பேசியதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 28) தவெக எம்.எல்.ஏ. கருப்பையா பேசுகையில், “அரசு கல்லூரி சோழவந்தான் தொகுதியில் இல்லை. அதனால் அரசு மகளிர் கல்லூரி வேண்டும். ஒருங்கிணைந்த வாடிப்பட்டி நீதிமன்றம் வேண்டும். அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, கடந்த 10 ஆண்டு காலமாக மூடப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய் நிதி இருந்தால் அந்த சர்க்கரை ஆலையை திறந்து இருக்கலாம்.
இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய ஒரு ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிப்பதற்கு அந்த பணத்தை, இந்த சர்க்கரை ஆலைக்கு கொடுத்திருந்தால், அந்த சர்க்கரையை திறந்து இருக்கலாம்” என்றார்.
குவியும் கண்டனங்கள்
’ஜல்லிக்கட்டு’ இளைஞர்களை சீரழிக்கிறது என பேசுவதா? என தவெக எம்.எல்.ஏ. கருப்பையா பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
திமுக என்.ஆர்.ஐ. ஐடிவிங்: இளைஞர் சமுதாயத்தை ஜல்லிக்கட்டு சீரழிக்கிறது என்று சட்டசபையில் பேசிய தவெக MLA. இதுதான் ஜல்லிக்கட்டு குறித்த தவெகவின் நிலைப்பாடா?
திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா: தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், நமது இளைஞர்களின் உணர்வோடு கலந்த பாரம்பரியமாகவும் இருக்கும் ஜல்லிக்கட்டை இப்போது “இளைஞர்களைச் சீரழிக்கும் ஒன்று” என்று சித்தரிக்கத் தொடங்கிவிட்டார்களா?
ஜல்லிக்கட்டு இளைஞர்களைச் சீரழிக்கிறது என்பதுதான் தவெகவின் நிலைப்பாடா? ஜல்லிக்கட்டுக்காக வீதிக்கு வந்ததும் இளைஞர்கள்தான். ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததும் அந்த இளைஞர்களின் எழுச்சிதான். அந்த இளைஞர்களிடமே இன்று ஜல்லிக்கட்டு சீரழிவை ஏற்படுத்துகிறது என்று சொல்வதுதான் இவர்களின் அரசியலா? ஜல்லிக்கட்டுக்காகப் போராடியதோடு நிற்காமல், அதன் பெருமையை உலகறியச் செய்ய அலங்காநல்லூரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கமே அமைத்தவர் எங்கள் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் இன்று இவர்கள் …
நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன்: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவதல் எனும் ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறது என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரை தன் தொகுதிக்குள் வைத்துள்ள தவெக சட்டமன்ற உறுப்பினரே பேசுவது வன்மையாக கண்டிக்கதக்கது. ஜல்லிக்கட்டு சீரழிவு அல்ல.. தமிழர்களின் பண்பாடு !
தமிழர்களின் கலாச்சாரம்! தமிழர்களின் வீரம்! தமிழர்களின் தொன்மம்!
நாம் தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்திக்: இளைஞர்களை ஜல்லிக்கட்டு சீரழிக்குதாம். சட்டமன்றத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா. அலங்காநல்லூரும், பாலமேடும் சோழவந்தான் தொகுதிக்குள்தான் வருகிறது. அந்த சோழவந்தான் தொகுதி மக்களின் வாக்குகளைப் பெற்று, வென்றவரின் நன்றிப்பெருக்குப் பேச்சு.
NKRaj/ந.கனகராசு: ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும். அப்போ ஜனநாயகன் படம் தான் நல்வழி படுத்துமா?
திமுக ஜூலி: இளைஞர்களைச் சீரழிப்பது ஜல்லிக்கட்டு விளையாட்டா?
எங்கள் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு பற்றிப் பேசத் தனித் தகுதியும், முறையான புரிதலும் வேண்டும்! வீரத்தையும், மண் சார்ந்த பாரம்பரியத்தையும் கட்டிக் காக்கத் தெருவில் இறங்கிப் போராடிய லட்சக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வை இழிவுபடுத்தாதீர்கள்.
மக்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து, உங்கள் அறியாமையைத் தான் வெளிப்படுத்துகிறீர்கள். தமிழர் மரபும், எங்கள் உரிமையும் என்றும் விட்டுக்கொடுக்கப்படாது!
@Thakkar2024: சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களே இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் கலந்து கொள்வது போல காட்சியில் விஜய் நடித்து 2017 வெளிவந்த மெர்சல் என்னும் காவியத்தை இன்னமும் பார்க்கவில்லை போலும். மாண்புமிகு முதல்வர் அன்னாரை மன்னிக்க வேண்டுகிறோம்.
