தமிழகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய், மே 10ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கு எடுப்பிலும் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெற்றது.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10ஆம் தேதி முதல் திருச்சி கிழக்கு தொகுதியை காலியாக அறிவித்துள்ளது.
பொதுவாக, ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, வரும் நவம்பர் மாதத்திற்குள் திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக மற்றும் தவெக சார்பில் வேட்பாளராக யாரை போட்டியிட வைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
