தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள விஜய் தலைமையிலான அரசு காவல்துறையின் உயர் மட்ட அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து இன்று (14.05.2026) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று காலை இன்று 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் புதிய பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள்
பணியிட மாற்ற விவரங்கள்:
ராஜீவ் குமார், IPS: ஆவின் (TMCMPF) நிறுவனத்தின் டிஜிபி மற்றும் தலைமை கண்காணிப்பு அதிகாரியாகப் பணியாற்றி வந்த ராஜீவ் குமார், தற்போது சென்னை, ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியின் (Police Training College) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS: காத்திருப்போர் பட்டியலில் (Compulsory Wait) இருந்த டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், தற்போது ஆவின் நிறுவனத்தின் டிஜிபி மற்றும் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் குமார் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பணியிடம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் கே.ஏ. செந்தில் வேலன், IPS: காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி செந்தில் வேலன், தற்போது சென்னை, ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் பயிற்சி அகாடமியின் (TNPA) ஐஜி மற்றும் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
