‘ட்ராமா’: விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

Trauma Movie Review 2025

ஒரு திரைப்படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை காட்டி, அவை ஒரு புள்ளியில் இணைவதாகச் சொல்கிற உத்தி பரபரப்புக்கு உத்தரவாதம் தரும். அந்த புள்ளி எது, அது எத்தகையது என்று சொல்கிற வகையில் அப்படம் ரசிகர்களைக் கவர்வதாக அமையும். அப்படியொரு திரைப்படமாக அமைய முயற்சித்திருக்கிறது சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிற ‘ட்ராமா’. Trauma Movie Review 2025

தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், பிரதோஷ், பூர்ணிமா ரவி, ரமா, மாரிமுத்து, அஸ்வின் நாக், ஈஸ்வர், பிரதீப் கே.விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Trauma Movie Review 2025

இப்படம் தரும் காட்சியனுபவம் எத்தகையது? Trauma Movie Review 2025

’செயற்கை கருத்தரிப்பு’ பிரச்சனை! Trauma Movie Review 2025

இரண்டு ‘அமெச்சூர்’ திருடர்கள் கார் திருட்டில் ஈடுபட முடிவெடுக்கின்றனர். அதற்காக, தங்களது அறிவுக்கு எட்டிய வரையில் சில முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

ஒருநாள் அவர்களது முயற்சிக்கு வெற்றி கிட்டுகிறது. ஒரு சொகுசு காரை திருடி எடுத்துவரும்போது, காவல் சோதனைச்சாவடியில் சிக்குகின்றனர். போலீசார் சோதனை செய்யும்போது, காரில் ஒரு இளம் வாலிபரின் பிணம் இருப்பதைக் கண்டறிகின்றனர்.

பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்யும் இளம்பெண்ணை ஒரு இளைஞர் தீவிரமாகக் காதலிக்கிறார். மெதுவாக அப்பெண்ணின் விருப்பத்தையும் சம்மதத்தையும் பெறுகிறார். இருவரும் சேர்ந்து ஊர் சுற்றத் தொடங்குகின்றனர். Trauma Movie Review 2025

ஒருகட்டத்தில் அந்தப் பெண் கர்ப்பமுறுகிறார். அதனைத் தனது காதலரிடம் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், அவரது மொபைல் எண்ணைத் தொடர்பு கொள்ள முடிவதில்லை. இந்த நிலையில், ஒருநாள் நள்ளிரவில் போக்குவரத்து சிக்னலில் அவரைக் காண்கிறார். அவரை பின்தொடர்ந்து செல்கிறார். அப்போது, அவர் செய்யும் வேலை எத்தகையது என்று அறிந்து அதிர்ச்சியடைகிறார்.

மூன்றாவது கதை, செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையைத் தங்களுக்கான தீர்வாகக் கருதும் ஒரு தம்பதி பற்றிப் பேசுகிறது.

இளம் தம்பதியரான சுந்தர் – கீதா (விவேக் பிரசன்னா, சாந்தினி) குழந்தைப்பேறின்மையால் தவிக்கின்றனர். அதற்காக, பல மருத்துவமனைகளை நாடுகிறார் கீதா. ஆனால், குறை தன்னிடம் உள்ளது என்பதை அவரிடத்தில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் சுந்தர்.

இந்த நிலையில், ஒருநாள் ஒரு செயற்கை கருத்தரிப்பு மையம் குறித்த விளம்பரத்தைக் காண்கிறார் சுந்தர். நண்பன் ரகுவை (அனந்த் நாக்) அழைத்துக்கொண்டு அந்த மருத்துவமனைக்கு அவர் சென்று வருகிறார்.

அங்கு தரப்படும் மாத்திரையைக் கீதாவுக்குத் தருகிறார். ஆனால், அவருக்குத் தெரியாமல் அதனைச் செய்கிறார்.

சில நாட்கள் கழித்து கீதா கர்ப்பமுறுகிறார். அதனால், அவரும் சுந்தரும் அடையும் மகிழ்ச்சி சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. திடீரென்று வரும் ஒரு போன்கால் அவர்களது மகிழ்ச்சியைச் சிதைக்கிறது.

சுந்தர் – கீதா தம்பதியர் பெரும்பிரச்சனையில் தாங்கள் சிக்கியிருப்பதை உணர்ந்ததும், அதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.  

பிறகு என்னவானது? தங்களை அவதிக்குள்ளாக்கும் கும்பலை அவர்கள் சமாளித்தார்களா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

மேற்சொன்ன மூன்று கதைகளையும் தாண்டி, குற்றச்செயலில் ஈடுபடும் ஒரு கும்பலைப் பற்றியும் பேசுகிறது ‘ட்ராமா’ திரைக்கதை.

அனைத்தையும் இணைக்கும் புள்ளி அபத்தமாக இல்லை எனினும், அது ’திருப்திகரமாக’ திரைக்கதையில் அமையவில்லை. அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு கதையிலும் பிரச்சனைகளை விளக்கிய அளவுக்குத் தீர்வுகள் அமையப் பெறவில்லை. அதுவே இப்படத்தின் பெருங்குறை.

படம் பார்க்கலாமா?! Trauma Movie Review 2025

கதையின் ஆதார மையமாக விவேக் பிரசன்னா, சாந்தினி இருவரும் திகழ்கின்றனர். அதற்கேற்ற நடிப்பு அவர்களிடத்தில் இருந்து வெளிப்பட்டுள்ளது.

இதில் இளம் ஜோடியாக பூர்ணிமா ரவி, பிரதோஷ் இருவரும் நடித்துள்ளனர். அவர்களது ‘பெர்பார்மன்ஸ்’ சாதாரணமாக நாம் தினசரி வாழ்வில் எதிர்கொள்கிற ஒரு ஆண் பெண்ணை நினைவூட்டுகிறது.

இப்படத்தில் நகைச்சுவையூட்டும்விதமாக மெக்கானிக் ஆக வரும் ஈஸ்வர் மற்றும் கார் திருட்டில் ஈடுபடுபவர்களாக வரும் மதன்கோபால், அவரோடு வரும் நபரின் இருப்பு அமைந்துள்ளது. சில இடங்களில் சிரிக்க முடிந்தாலும், அந்த காட்சிகளில் பழைய நெடி தென்படுவதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

இது போக சஞ்சீவ், வையாபுரி, மாரிமுத்து, ரமா, அனந்த் நாக், நமோ நாராயணா, பிரதீப் கே.ராஜன், அருவி பாலா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். அவர்களது பங்களிப்பு குறை சொல்ல இயலாத அளவுக்கு உள்ளது.

நல்லதொரு ‘த்ரில்லர்’ படம் பார்க்கிற எண்ணத்தைத் தொடக்கத்திலேயே விதைத்துவிடுகிறது ‘ட்ராமா’. அதன் பின்னணியில் ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசன், கலை இயக்குனர் முஜிபுர் ரஹ்மான், படத்தொகுப்பாளர் முகன் வேல், ஸ்டண்ட் கொரியோகிராஃபர் சுரேஷ் உள்ளிட்ட பலரது உழைப்பு இருக்கிறது.

இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் இசையில் பாடல்கள் ‘ஓகே’ ரகம். பின்னணி இசையோ காட்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிப்புக்கலைஞர்களை ஒருங்கிணைத்து, தான் விரும்பிய திசையில் நகர்கிற திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன்.

இருக்கிற பட்ஜெட்டில் திருப்திகரமாக படைப்பொன்றை தந்துவிடும் ஆற்றல் இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார்.

ஆனால், இப்படத்தின் திரைக்கதையும் சில காட்சிகளும் அப்படியொரு படைப்பாக ‘ட்ராமா’வை மலரவிடாமல் தடுத்திருக்கின்றன.

ஏற்கனவே சொன்னது போல, இரண்டு திருடர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் திருப்தியைத் தரும் வகையில் இல்லை. போலவே, பின்பாதியில் அந்த காதல் ஜோடி சம்பந்தப்பட்ட காட்சிகளில் தெளிவு இல்லை. குற்றப் பின்னணி கொண்ட அந்த கும்பல் எப்படிப்பட்டவர்கள், அவர்களது முன்கதை என்ன என்ற விவரங்களும் வெறுமனே வசனங்களில் மட்டுமே சொல்லப்படுகிறது.

குறிப்பாக, கிளைமேக்ஸ் பகுதி திருப்பமும் தீர்வும் அவசர கதியில் கதையில் திணிக்கப்பட்டிருப்பதாக எண்ண வைக்கிறது. அதனைத் தவிர்த்திருந்தால் ‘சூப்பர்ப்’ என்று சொல்லும்படியாக இந்த ‘ட்ராமா’ அமைந்திருக்கும். அது போன்ற குறைகளைப் பொருட்படுத்தவில்லை என்றால் தாராளமாக இப்படத்தைக் கண்டு ரசிக்க முடியும். அதற்கேற்ற உழைப்பு இதில் கொட்டிக் கிடக்கிறது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share