தமிழக முதல்வர் விஜய்யின் (CM Vijay) அலுவலகம், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வது தளத்துக்கு மாற்றப்படுவது தொடர்பாக தலைமை செயலக அரசு ஊழியர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் ஜூலை 27-ந் தேதி வெளியிட்ட அறிக்கை:
- தமிழ்நாடு முதலமைச்சர், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு இடம் மாறுவதை வரவேற்கிறோம்.
- ஆனால், நடைமுறையில் உள்ள சிக்கல்களை தமிழ்நாடு முதலமைச்சரின் கனிவான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
- நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தில் வணிகவரி, பதிவு (ம) அறநிலையங்கள் துறை மற்றும் உள் (மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை) துறைகள் செயல்பட்டு வருகின்றன.
- இதில் வணிகவரி, பதிவு (ம) அறநிலையங்கள் துறையினை நாமக்கல் கவிஞர் மாளிகையின் பல்வேறு தளங்களில் உள்ள கூட்ட அரங்கிலும் உணவு அறைகளிலும் இடமாற்றம் செய்வது என்பது ஏற்புடையதல்ல. ஏனெனில், பணியாளர்கள் பணியாற்றுவதற்கு தேவையான இடவசதி இருக்காது என்பதோடு மட்டுமல்லாமல் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை வைப்பதற்கும் பராமரிப்பதற்கும் போதுமான இடமே இருக்காது.
- செய்தி மற்றும் விளம்பரத் துறையானது கலைவாணர் அரங்கத்திற்கும், உள் (மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை) துறையானது தற்போதுள்ள முதலமைச்சர் அலுவலகத்திற்கும், வணிகவரி, பதிவு (ம) அறநிலையங்கள் துறையானது நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஒவ்வொரு தளத்திலுள்ள கூட்ட அரங்கிலும் உணவு அறைகளில் மாற்றப்பட இருப்பதாக தெரிய வருகிறது.
- உள் (மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை) துறையின் பணியாளர்களையும் அத்துறைக்கு உட்பட்ட கோப்புகளையும் பதிவேடுகளையும் தற்போதுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்வதற்கு போதுமான இடவசதி இல்லை.
- மேலும், செய்தி (ம) விளம்பரத்தின் நிர்வாகத் துறையானது தலைமைச் செயலகத்தில் செயல்பட வேண்டுமேன்றி, இயக்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவது என்பது ஏற்புடையதல்ல.
தீ விபத்து ஏற்பட்டால்…
ஒவ்வொரு பணியாளருக்கும் அலுவலருக்கும் பணியாற்றிட தமிழ்நாடு அரசின் நடைமுறையிலுள்ள ஒதுக்க வேண்டிய குறைந்தபட்ச தரைத்தள அளவு என்பது தலைமைச் செயலகத்தில் மட்டும் இதுநாள் வரை பின்பற்றப்பட்டதே இல்லை. அதிலும், குறிப்பாக தலைமைச் செயலகத்தின் பிரதான தளத்தில், ஏறத்தாழ அனைத்துத் துறைகளிலும் பணியாளர்கள் சென்று வருவதற்கு கூட இடவசதி இல்லாத வகையில் நவீனமயமாக்கல் (Modernisation) என்ற அடிப்படையில் பிரிவுகள் அமைக்கப்பட்டு, முற்றிலும் பணியாளர்களின் நலனுக்கு எதிராக உள்ளது.

தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தில் ஏதேனும் பெரும் தீ விபத்து ஏற்பட்டால், குறிப்பாக உள் துறையின் சில பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்கள் அந்த விபத்திலிருந்து தங்களைப் தற்காத்துக் கொள்ள எந்தவித வாய்ப்பும் இல்லாத நிலையில் பணியாற்றி வருகின்றனர். இதைப்போன்ற தருணங்களில், தீயணைப்பு வாகனங்கள் பிரதான கட்டடத்தின் உள்ளே வந்து தீயை அணைப்பதற்கு இயலுமா என்பது பெரும் கேள்விக்குறி.
உணவு அறைகளில் அலுவலகங்கள்
தலைமைச் செயலகத்தில் இதைப்போன்று பல்வேறு தருணங்களில், நவீனமயமாக்கல் நடவடிக்கை (Modernisation) என்ற அடிப்படையில் சில துறைகள் உணவு அறைகளிலும் வராண்டாக்களிலும் பல மாதங்களாக செயல்பட்டு வந்துள்ளன. இதனால், பணியாளர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

மேலும், தற்போது முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றம் செய்யப்படுவதால், அதற்கான கூடுதல் இடம் தேவைையின் அடிப்படையில், ஒன்பதாவது தளத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடத்தினை எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இத்தளத்தில் உள்ள பணியாளர்களுக்கு எவ்வாறு இட ஒதுக்கீடு செய்யப்படும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
ஆலோசனை நடத்தவே இல்லை
இதைப்போன்று பல்வேறு தருணங்களில் பணியாளர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வதில் ஏற்படும் சிக்கல்களை குறித்து விவாதிப்பதற்கும் மாற்று வழிகளை மேற்கொள்வதற்கும் இதற்கெல்லாம் பொறுப்பேற்கும் பொதுத் துறையானது தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்று கிஞ்சித்தும் எண்ணியதில்லை. பொதுத் துறையானது இதே போக்கினைத்தான் தற்போதும் தொடர்கிறது என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
பட்ஜெட் பணிகள் பாதிப்பு
எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ஆட்சி அமைந்த பின்னர் தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உள்ள வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையிலும் அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவுள்ள நிலையிலும், தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மற்றும் ஒன்பதாவது தளத்திலுள்ள துறைகளை இடமாற்றம் செய்வது என்பது பட்ஜெட் பணிகளை வெகுவாக பாதிக்கும் என்பதனையும் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் முதலமைச்சரின் கனிவான கவனத்திற்குக் கொண்டு வருகிறது.
உரிய இடம் ஒதுக்கீடு செய்க
மேற்சொன்ன சூழ்நிலையில், நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதலமைச்சர் அலுவலகம் மாற்றம் செய்யும்போது, அதன் காரணமாக இடமாற்றம் செய்யப்படும் துறைகளில் பணியாற்றும் தலைமைச் செயலகப் பணியாளர்கள் / அலுவலர்களுக்கு பாதுகாப்பாகவும் அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலையோடு உரிய இடத்தினை ஒதுக்கீடு செய்து, அரசுப் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கு ஆவண செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சரை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
