’அப்படி’ செய்தால் அநீதி.. மோடிக்கு விஜய் கடிதம்!

Published On:

| By Mathi

TN CM Vijay writes to PM Modi on Delimitation

தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் (TN CM Vijay) மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளார்.

அக்கடிதத்தில், நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்தல், பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குதல் ஆகியவை மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும்,

ADVERTISEMENT

இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 12.8.2026 அன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது என்றும்,

அத்தீர்மானத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் அதே நிலையில் நிரந்தரமாகத் தொடர்வதற்கும்,

ADVERTISEMENT

மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ அளவைப் பாதுகாப்பதற்கும் (அதாவது, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையிலான தற்போதைய விகிதாச்சாரப் பகிர்வை ஏற்கனவே உள்ளவாறே தொடர்வதற்கும்),

மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் டையிலான விகிதத்தைப் (2.2 : 1) பேணுவதற்கும்,

ADVERTISEMENT

தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதாக முதலமைச்சர் விஜய் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பகிர்வை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் பின்னணியில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின்னர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 81(2)(a)-ஐப் பின்பற்றி தொகுதி மறுவரையறை மேற்கொண்டால், 1967-இல் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகள் 41-லிருந்து 39-ஆகக் குறைக்கப்பட்டது போன்று, தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் கணிசமான தொகுதிகளை இழக்க நேரிடும் என்று சட்டமன்றப் பேரவையில் விவாதிக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எய்தி, சிறப்பான சுகாதார மற்றும் பொதுநலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு, 1971-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்வது பெரும் அநீதி இழைப்பதாக அமையும் என்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானத்தில் பின்வருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளன:-

(i) மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும்;

(ii) மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும்; அதாவது, மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இடப் பகிர்வு முறை தொடர வேண்டும்.

(iii) எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்துகிறது.

மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்திருப்பதாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தைப் பரிசீலித்து, இது தொடர்பான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் மோடியை கனிவுடன் கேட்டுக் கொள்வதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share