ராகுல் காந்தியின் ‘ரேபரேலி’ தொகுதி நிறுவனத்துக்கு தமிழகத்தின் நடத்துநர் ஒப்பந்தம் தந்த விஜய் அரசு!

Published On:

| By Mathi

TN Bus Conductor Contract

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு பேருந்துகளுக்கான நடத்துநர் ஒப்பந்தத்தை முதல்வர் விஜய் அரசு வழங்கி இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதா ? அதுவும் உத்திரபிரதேச மாநிலம் ரபேரலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது ?

ADVERTISEMENT

தேர்தலுக்கு முன்பாக தனியார்மயத்திற்கு எதிராக குரல் எழுப்பிய தவெக, ஆட்சிக்கு வந்தவுடன், அதே தனியார்மயமாக்கும் முறையை பின்பற்றியிருப்பதோடு, அந்த ஒப்பந்தத்தை உத்திரபிரதேச மாநிலம் ரபேரலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொடுக்க முன்வந்திருப்பது தான் முதலமைச்சர் ஜோசப் விஜய் சொன்ன மாற்றமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பல ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப துளியளவும் நடவடிக்கை எடுக்காத தவெக அரசு, அரசுப் பேருந்துகளுக்கு குத்தகை அடிப்படையில் நடத்துனர் நியமனம் செய்யும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பது வேலைக்காக காத்திருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

ADVERTISEMENT

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய போக்குவரத்துத் துறையில் போதுமான அளவில் பணியாளர்கள் இல்லாத நிலையில், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் குத்தகை அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதற்கு தவெக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் தங்களது கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.

எனவே, மாநகரப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதற்கு உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை உடனடியாக ரத்து செய்வதோடு, போக்குவரத்துத்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share