தமிழக சட்டமன்றத்தில் இன்று தவெக அரசு தனது முதல்பட்ஜெட்டை நிதியமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்தார். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.23,357 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 5) தாக்கல் செய்யப்படும் 2026 – 27ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “தாய் மற்றும் குழந்தை நலப் பராமரிப்பு தமிழ்நாட்டில் பொது சுகாதார அமைப்பின் முக்கியத் தூணாக விளங்குகிறது. சமீபத்திய தேசிய மாதிரி பதிவு அமைப்பின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் குழந்தை இறப்பு விகிதம் ஆயிரம் பிறப்புகளுக்கு 11 ஆக உள்ளது. இது தேசிய அளவில் மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றாகும். அரசு தொடர்ந்து பொது சுகாதாரத் துறையில் செயல்படுத்திய திட்டங்களால் மட்டுமே இது சாத்தியமானது. இவற்றுக்குச் சான்றாக மாநிலத்தில் 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதில் 53 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இதன் மூலம் மருத்துவத் தேவைகளுக்குப் பொதுமக்கள் சொந்தமாகச் செலவிடும் தொகையைக் குறைக்கும் நோக்கில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு ரூ. 560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மூத்த குடிமக்களுக்கு ஆண்டு முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் படிப்படியாகத் தொடங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு கோடி ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாநிலம் முழுவதும் தாய் கேர் என்ற பெயரில் கருவுற்ற பெண்களுக்குச் சேவை மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு ரூ. 23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தொலைதூரக் கிராமங்களில் வாழும் மக்களுக்குச் சிறப்பு மருத்துவப் பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் அரசு மையம் கிளை (Hub and Spoke) மருத்துவமனைகள் வகையிலான தொலை மருத்துவப் பராமரிப்பு அமைப்பு உருவாக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு ரூ.18.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
புற்றுநோய் பராமரிப்பு தொடர்பான அரசு மையம் கிளை மருத்துவமனை வாயிலான அமைப்புகளை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் தொற்றுநோய்கள், புற்றுநோய்களின் தொடர் சிகிச்சைக்கு அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம். மருந்து விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் ரூபாய் 100 கோடி உயர்த்தப்படுகிறது.
அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.23,357 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
