தமிழ்நாட்டின் 2026–27ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று (ஆகஸ்ட் 5) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்காக ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் “10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்: ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் நோக்கில், சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் தமிழகத்தை உச்சத்திற்குக் கொண்டுவர மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள்: பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்குக் கொண்டுசெல்ல, ‘தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள்’ நடத்த ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இளம் திறமையாளர்களுக்குப் பயிற்சி: விளையாட்டில் ஆர்வமும் திறமையும் உள்ள 8 முதல் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பல்கலைக்கழக உட்கட்டமைப்பு: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
