2026–2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு 44,527 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தவெக அரசு.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் முதல் பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 5) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு வருகிறார்.
இதில் பள்ளிக் கல்வி துறைக்கான நிதி கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை நிதி ஒதுக்கீடு – திமுக ஆட்சியில்
2021-2022 – ரூ.32,599 கோடி
2022-2023 – ரூ. 36,895 கோடி
2023-2024 – ரூ.40,299 கோடி
2024-2025 -ரூ. 44,042 கோடி
2025-2026 ரூ.46,767 கோடி
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால் பட்ஜெட்டில் பள்ளி கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் தற்போது தவெக அரசு தனது முழு முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்திருக்கிறது. இதில் பள்ளிக் கல்விக்கான பட்ஜெட் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.
2024-2025 ஆண்டை ஒப்பிடுகையில் 485 கோடி ரூபாயும், 2025-2026 ஆண்டை ஒப்பிடுகையில் 2,240 கோடி ரூபாயும், இடைக்கால பட்ஜெட்டை ஒப்பிடுகையில் 4,007 கோடி ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ”கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து” என உரக்கச் சொல்லும் நம்முடைய கழகத் தலைவர்
முன்னாள் முதல்வரின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஏறுமுகத்திலேயே இருந்தது.
ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும், குறைவான நிதியே தற்போதைய அரசால் ஒதுக்கப்படுவது இன்று வெளியான நிதிநிலை அறிக்கை மூலம் தெரியவருகிறது. “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்றென்றும் தொடர்வதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
குழந்தைகளுக்காக , கல்விக்காக கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று முதல்வர் விஜய் கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
