வேளாண் பயிர்களுக்கு 100 சதவிகிதம் பயிர்க்காப்பீடு வழங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 – 27-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் இன்று (ஆகஸ்ட் 6) சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதே முதல்வர் ஜோசப் விஜய்யின் முக்கிய நோக்கம். வேளாண்மை பாதிக்கப்பட்டால் எந்தத் துறையிலும் சரியான வளர்ச்சி இருக்காது. எனவே வேளாண் துறையில் பழைய திட்டங்களுடன் புதிய திட்டங்களும் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்களை ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
அதேசமயம் வேளாண் பயிர்களுக்கு 100 சதவிகிதம் பயிர்க்காப்பீடு வழங்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 14 தொகுப்புகளுக்கு மாநில அரசின் நிதியாக ரூ.648 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஆகஸ்ட் 5) தொடங்கியது. முதல் நாளில் 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். தமிழ்நாடு பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டது.
