காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (தமாகா) இணைக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 8-ந் தேதி செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது: தமிழகத்தின் 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் எந்தவித பிரதிநிதித்துவமும் இல்லாமல் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, தற்போது தமிழக அமைச்சரவையில் 2 இடங்கள் கிடைத்திருப்பது பாராட்டுக்குரியது மற்றும் வாழ்த்துக்குரியது. அரசுக்கு நன்றிக்குரியது என தமாகா கருதுகிறது.
காங்கிரஸ் இடம்பெற்றால் நேர்மைதான்..
ஒரு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுகிறது எனில் அதற்கு “நேர்மை, எளிமை, தூய்மை மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் செயல்பாடு இருக்கும்” என்று அர்த்தம். தமாகா இதை வரவேற்கிறது.
இணைந்து செயல்பட தொடங்கி இருக்கிறோம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், ”காங்கிரஸ் மேல ஒரு நல்ல அபிப்பிராயமா இருக்கீங்க… இணைந்து பயணிக்கிறதுக்கு வாய்ப்புகள் இருக்கா?”என கேள்வி கேட்க, “இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியாக இணைந்து தற்போது செயல்பட தொடங்கி இருக்கிறோம்” என்றார் ஜிகே வாசன்.
காங்கிரஸில் தமாகா இணைப்பு?
இதனையடுத்து, ”காங்கிரஸில் தமாகா இணைக்கப்படுமா?” என்ற கேள்விக்கு, “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தன்மையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. முதல் கட்டமாக மண்டல கூட்டங்களுடைய ஆலோசனைகளை நான் முறையாக சரியாக கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராகுல் காந்தியுடன் ஜிகே வாசன் ஒரே மேடையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
