நடுக்கடலில் படகு பழுதாகி இலங்கை கடல் பகுதிக்குள் சென்றதால் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை உடனே விடுதலை செய்ய கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஆகஸ்ட் 8-ந் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான ஆகஸ்ட் 5-ந் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது ரமேஷ் என்பவரின் விசைப் படகு பழுதாகி இலங்கையின் நெடுந்தீவு கடல் பகுதிக்கு சென்றது.
இது தொடர்பாக இலங்கை தமிழர்கள், இலங்கை கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேர் எல்லை தாண்டி வந்ததாக குற்றம்சாட்டி கைது செய்தனர். அவர்களது விசைப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது இலங்கை சிறையில் 11 மீனவர்களும் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்; பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்பது ராமேஸ்வரம் மீனவர்களின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10,000 மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்; அதேபோல அதிகபட்சமாக ரூ10 கோடி வரை வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் மீனவர் சங்க பிரதிநிதிகள்.
