பாஜகவைத் தொடர்ந்து அதன் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. tmc gk vasan reject all party meet
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து வரும் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழகத்தின் 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. ஆனால் நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள், தாங்கள் பங்கேற்க போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என இன்று அறிவித்துள்ளது.
திசைத் திருப்பவே கூட்டம்! tmc gk vasan reject all party meet
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்காது. மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமான மத்திய அரசின் கல்வி நிலைப்பாட்டிற்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதரவாகவே இருக்கிறார்கள்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசின் எந்த அதிகார பூர்வமான அறிவிப்பும் வராத நிலையில், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது.
கடந்த வாரம் 25.02.2025 தமிழகத்திற்கு வருகை தந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பில் எந்த நிலைப்பாட்டையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும் அப்படி இருந்தாலும் கூட தமிழகத்திற்கு பாராளுமன்ற தொகுதிகள் கூடுமே தவிர குறையாது என்றும் தெளிவுப்படக் கூறியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் தொடர்ந்து வளர்ந்துகொண்டு இருக்கும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருக்கும் பொழுது, அதையெல்லாம் மக்களிடம் இருந்து திசைத் திருப்பவே இக்கூட்டம் நடைபெறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது.

எனவே வருகிற மார்ச் 5-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்கவில்லை” என தெரிவித்துள்ளது.
