மழைக் காலத்தில் வீட்டிலும், வெளியே செல்லும்போது மின் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்த வழிமுறைகளை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டிசம்பர் முடியும் வரை மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மழைக் காலங்களில்தான் அதிகமான மின் விபத்துகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகின்றன.
மழைப் பொழிவு காரணமாக ஏற்படும் ஈரப்பதம் மற்றும் மரங்கள் முறிந்து விழுவதால் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சார விபத்துகள் ஏற்படுகின்றன. மழைக் காலங்களில் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி மின் விபத்தில் இருந்து தப்பிக்க சில பாதுகாப்பு வழிமுறைகளை காணலாம்.
- ஈரமான கைகளில் சுவிட்ச் போடுவதையும், மின் சாதனங்கள் இயக்குவதையும் தவிர்க்க வேண்டும். பிளக்குகளில் மழைநீர் கசிவு இருந்தால் அதனை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
- குளியலறை, கழிப்பறை போன்ற ஈரம் அதிகமுள்ள இடங்களில் சுவிட்ச் போடுவதை தவிர்க்க வேண்டும்
- வீட்டில் உள்ள மின் சாதனத்தை தொடும்போது ஷாக் அடித்தால், உடனே ரப்பர் செருப்பை அணிந்து மெயினை ஆஃப் செய்ய வேண்டும். பிறகு அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.
- தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பது, நடப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மின்கம்பங்கள் அருகில் நடப்பது, குழந்தைகளை விளையாட விடுவது, அதன் அருகில் வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- தாழ்வாக செல்லும் மின் கம்பிகளுக்கு கீழே நடக்க வேண்டாம். ஏனெனில் மழைக் காலங்களில் அவை எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழ வாய்ப்பு உள்ளது.
- மழைநீரில் மின்கம்பி விழுந்திருப்பதை பார்த்தால், அதற்கு அருகில் செல்லாதீர்கள்.. உடனே மின் வாரிய உதவி எண் 94987 94987 -க்கு அழைத்து தகவலை சொல்ல வேண்டும்.
- வீட்டில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீர் ஊற்றி அணைக்க முயலக் கூடாது. ஏனெனில் மின்சாரத்திற்கு தண்ணீர் ஆபத்தானது.
- வீடுகள், கட்டிடங்களுக்குள் சுவர்கள் ஈரமாக இருந்தால் அதனை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
- மின் கம்பிகள் அல்லது மின் வயர்களில் துணிகளை உலர்த்தவோ, தொங்கவிடவோ வேண்டாம்
- மின் கம்பங்களில் ஆடு, மாடு மற்றும் கால்நடைகளை கட்டுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்
- இடி அல்லது மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் மொபைல்போன் பயன்படுத்த கூடாது.
- பழுதடைந்த சுவிட்ச், ப்ளக் உள்ளிட்டவற்றை மாற்றுவது மிகவும் நல்லது
இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலும் சரி, வெளியிலும் சரி மின் விபத்தில் சிக்காமல் பாதுகாப்பாக இருங்க மக்களே..
