சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. 12 நாட்கள் நடைபெற்ற இந்த செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஆகஸ்ட் 9) பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது.
இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும், அணிகளுக்கும் பதக்கங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்றைய (ஆகஸ்ட் 10) ட்விட்டர் பதிவில், ‘44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.
உலகெங்கிலும் இருந்து இந்தப் போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று , நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
