தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS) இடைக்கால மாதாந்திர பங்களிப்பு தொகை என்பது 1.1.2026 மற்றும் அதற்கு பின்னரோ ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தவிர்த்து உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொருந்தாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பான தமிழக அரசு அளித்துள்ள விளக்கம்:
கேள்வி: 01.01.2026 அன்றோ (அ) அதற்குப்பின்னர் ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் (ம) ஆசிரியர்களில் சிலர், மறு நியமனம் (Re-employment) அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மறுநியமன ஊதியம் நிர்ணயம் செய்யும்போது, இடைக்கால மாதாந்திர அளிப்புத் தொகை மறுநியமன ஊதியத்திலிருந்து கழிக்கப்பட வேண்டுமா?
பதில்: பணி ஓய்விற்கு பிந்தைய மறுநியமன நேர்வுகளில், மறுநியமனக் கால ஊதியத்தை நிர்ணயிக்கும்போது மாதாந்திர அளிப்புத் தொகை கழிப்பது தொடர்பான விதிகள், ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகளுக்காக வெளியிடப்படும் அறிவிக்கையில் இடம்பெறும். அது வரையில், மறு நியமன ஊதியம் நிர்ணயம் செய்யும்போது இடைக்கால மாதாந்திர அளிப்புத் தொகை கழிக்கப்பட வேண்டும்.
கேள்வி: 01.04.2003-க்குப் பிறகு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (Special Time Scale of Pay) பணியாற்றி, பின்னர் காலமுறை ஊதிய விகிதத்தில் (Regular Time Scale) நியமனம் / பதவி உயர்வு பெற்று, மொத்தம் 10 ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்து ஓய்வுபெற்றோருக்கு, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றிய காலம் தகுதியான பணிக்காலமாகக் கருதப்பட வேண்டுமா?
பதில்: காலமுறை ஊதிய விகிதத்தில் (Regular Time Scale) நிறைவு செய்யப்பட்ட பணிக்காலம் மட்டுமே தகுதியான பணிக்காலமாகக் கருதப்பட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றிய காலம் இதில் சேர்க்கப்படக்கூடாது.

கேள்வி: அரசாணை (நிலை) எண். 111-ன்படி வழங்கப்படும் மாதாந்திர இடைக்கால நிவாரணத் தொகை, 01.01.2026 அன்றோ அல்லது அதற்குப்பின்னர் ஓய்வு பெற்ற உள்ளாட்சி அமைப்புகள் (நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி மற்றும் பிற உள்ளாட்சி பணியாளர்களுக்கும் பொருந்துமா?
பதில்: அரசாணை (நிலை) எண். 111-ன்படி வழங்கப்படும் இடைக்கால மாதாந்திர அளிப்புத்தொகையானது, CPS திட்டத்தின் கீழ்வரும் தகுதியுள்ள மாநில அரசு பணியாளர்கள்/ஆசிரியர்கள் தவிர்த்த பிற பணியாளர் பிரிவுகளான உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்குப் பொருந்தாது.
