சேலத்தில் நகரப் பேருந்துகளுக்கு ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழக கொடி நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தமிழக அரசு பேருந்துகள் பச்சை, நீலம், சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இயக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக அரசு அமைந்ததும் அரசின் மினி பேருந்துகள் கட்சி கொடி நிறங்களில் தயார் செய்யப்படுகின்றன என தகவல்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து போக்குவரத்து துறையின் செயலி தமிழக வெற்றி கழக நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த சூழலில் சேலம் மாவட்டத்திற்கு புதிய நகரப் பேருந்துகள் வந்துள்ள நிலையில் அவற்றுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்டு டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த பேருந்துகள் சேலம் சாலைகளில் வலம் வரவுள்ளன.
தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்படும் பேருந்துகளுக்கும் சீரமைக்கப்படும் பேருந்துகளுக்கும் ஒரு கட்சி கொடியின் வண்ணம் அடித்து மாற்றுவது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அரசுச் சொத்துகளிலும் ஆளுங்கட்சியின் அடையாளங்களைப் புகுத்துவதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பொதுப்போக்குவரத்து என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவான ஒரு சேவை அமைப்பாகும். அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப பேருந்துகளின் நிறங்களை மாற்றுவது தேவையற்ற நிதி செலவை உண்டாக்கும்.
சமீபநாட்களாக அரசு பேருந்துகள் விபத்தில் சிக்குகின்றன. நேற்றுகூட தென்காசியில் ஒரு அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுபோன்ற விபத்துகளுக்கு, பேருந்துகளை சரியாக பராமரிக்காததுதான் காரணம் என அரசு பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே, ஆட்சி மாற்றங்களைக் கடந்து அரசுச் சொத்துகளுக்கு நிலையான, நடுநிலையான அடையாளங்களைப் பராமரிப்பதே மக்களின் வரிப்பணத்தை முறைப்படுத்தவும், பேருந்துகளை சரியாக பராமரிக்கவும் உதவும் என்கின்றனர் பேருந்து பயணிகள்.
