TAPS ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெளியிட்ட தெளிவுரை கடிதம், “மனித நேயமற்றது- மோசடி நடவடிக்கை”என அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சு.ஜெயராஜராஜேஸ்வரன், பி.பிரெடெரிக் எங்கெல்ஸ், மு.செல்வக்குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, கடந்த ஜனவரியில் TAPS திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது. திமுக அரசு உறுதியளிக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தோம்.
டேப்ஸ் திட்டம் மெல்ல மெல்லக் கொள்ளும் விஷம் என்று கருத்து
தெரிவித்து போராட்டங்கள் நடத்தினோம். தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும்
தவெக, தனது தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, டேப்ஸ் திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்ததை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
TAPS திட்டம் அறிமுகப்படுத்தி எட்டரை மாதங்கள் முடிந்த பின்பும், இன்று வரை அத்திட்டத்தை அமல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படாததால் TAPS திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில் தவெக அரசு, அரசாணை 111 மூலம் TAPS க்கான வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்படும் வரை, இடைக்கால பணப்பலன் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டது.
கடைசியாக பெற்ற மாத ஊதியத்தில் 30 சதவீதமும், அதற்குரிய அகவிலைப்படியும் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்று நிபந்தனை உள்ளது.
இடைக்கால பணப்பலன் வழங்கும் நடைமுறைக்காக வெளியிடப்பட்ட அரசாணையில் குறைந்தபட்ச பணிக்காலம் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நிதித்துறை வெளியிட்டுள்ள தெளிவுரைக் கடிதத்தில் குறைந்தபட்ச பணிக்காலம் 18 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 18 ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்து, 30 சதவீதம் இடைக்கால பணப்பெற்ற ஓய்வூதியிடமிருந்து கூடுதலாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை பிடித்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இச்செயல் மனித நேயமற்றது மற்றும் மோசடி நடவடிக்கை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். .
தவெக அரசின் இச் செயல்பாடு அரசு ஊழியர், ஆசிரியர் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. TAPS திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட பின்பு தான் TAPS திட்டத்தின் கோர முகம் வெளிப்படையாக தெரியவரும்.
டேப்ஸ் திட்டத்தில், ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பிலிருந்து தமிழக அரசு தன்னை விடுவித்து கொண்டு ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பு ஓய்வூதிய நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதியத்தில், நிதி இருந்தால் ஓய்வூதியம் வழங்கப்படும். போதுமான நிதி இல்லையென்றால் ஓய்வூதியம் வழங்குவது தடைபடும்.
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சந்திக்கும் அவலநிலை TAPS ஓய்வூதியர்களுக்கு ஏற்படுவது தவிர்க்க இயலாது. TAPS திட்டத்தை ஆதரித்த தலைவர்களும் இத்திட்டத்தின் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்று பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தமிழகத்தை விட வரி வருவாயில், இதர வருவாயில் பின்தங்கிய மேற்கு வங்காளம், ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டிஸ்கர், இமாச்சல் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டமே நடைமுறையில் உள்ளது. எனவே, தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, திமுக அரசு அறிமுகப்படுத்திய TAPS திட்டத்தை ஒழித்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு CPS ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
