2026- 27 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் முதல் வாரம் தாக்கல் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணிகள் நடந்து வந்தன.
முதல்வர் விஜய் அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மரிய வில்சன், ‘ முதலமைச்சருக்கு நிறைய இன்புட்ஸ் வந்து கொண்டே இருந்தது. கடந்த 15,16 நாட்களாக ரிவ்யூ மீட்டிங் நடத்தப்பட்டிருக்கிறது. அனைத்து துறை அமைச்சர்கள், செயலாளர்களுடன் ஆலோசனை நடந்தது. ஒவ்வொரு துறை அதிகாரிகளுடனும் சுமார் 7 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.
அமைச்சரவை கூட்டமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக வெற்றிக்கழக அரசு பதவி ஏற்ற பிறகு முதல் பட்ஜெட் நல்லபடியாக தாக்கல் செய்யப்படும்” என்றார்.
இன்னும் 6 மாதத்தில் இந்த ஆட்சி கவிழும் என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ”அவர் அறியாமையில் பேசுகிறார். இன்னும் கள யதார்த்துக்கு வரவில்லை. மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மரியாதை கொடுக்க அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் திமுகவுக்கும் தெரியவில்லை” என்று பதிலளித்தார்.
