விஜய் தலைமையில் அமையும் தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு ஆதரவு தருவது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகார குழு கூட்டம் சென்னையில் நாளை மே 6-ந் தேதி நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு 108 இடங்கள் மட்டும் கிடைத்தன. இதில் தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டதால் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இதன்படி தவெகவுக்கு 107 இடங்கள் கிடைத்துள்ளன. தவெக ஆட்சி அமைக்க – மெஜாரிட்டிக்கு 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு.
இதனையடுத்து 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவை விஜய் கோரியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேசி வேணுகோபால், விஜய்க்கு ஆதரவு தருவது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவெடுக்க மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது என்றார்.
இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியானது எங்களுக்கு (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி) தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. நாளைய தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரக் குழு கூடி, இதைப் பற்றி விவாதித்து ஒரு முடிவை எடுக்கும். அந்த முடிவை நாங்கள் மேலிடத்திற்குத் தெரிவிப்போம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ன முடிவெடுத்தாலும் அதை அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளும் என்றார்.
