தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், திருப்பதியில் அமைச்சர் வினோத் இன்று பூஜை செய்து வழிபட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் வரும் 5ஆம் தேதி 2026-2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்தநாள் வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
இதையொட்டி முதல்வர் விஜய், அமைச்சர்கள், துறை ரீதியான அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தியதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருந்தார்.
வேளாண்மை, உழவர் நலத்துறை சார்பில், வேளாண் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம், கடந்த ஜூலை 27ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
இதில், வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் விஜய், வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, ”நீர்ப்பாசன வசதி, இயற்கை வேளாண்மை வசதிகள் , பயிர் காப்பீடு உள்ளிட்டவை குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படும்.
2026-27- ஆம் ஆண்டு 131 லட்சத்து 36 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை இலக்காக நிர்ணயத்து அதனை எட்டுவதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அமைச்சர் வினோத் கூறினார்.
இன்னும் 4 தினங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அமைச்சர் வினோத் இன்று (ஆகஸ்ட் 1) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பட்ஜெட் ஆவணங்களை வைத்து பூஜை செய்து சாமி தரிசனம் செய்துள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”வேளாண்மை நிதிநிலை தாக்கல் செய்யப்படவிருப்பதால் திருப்பதி வெங்கடாஜலபதியிடம் அருள் பெற வந்தோம்” என்று கூறினார்.
இதற்கிடையே வேளாண் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
