2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் பிற கட்சிகளுடன் பேசி வருகிறது.
இந்தசூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமியிடம் தவெகவுக்கு அதிமுக ஆதரவு தருகிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ”பல ஊடகங்களில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அது முற்றிலும் தவறான ஒரு செய்தி.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய இயக்கம். புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், புரட்சி தலைவி அம்மா அவர்களால் காப்பாற்றப்பட்டு, இன்று எங்களுடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் எடப்பாடியாருடைய தலைமையிலே சீரோடும் சிறப்போடும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இயக்கம்.
எந்த சூழ்நிலையிலும் அதிமுக தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்பதை பொதுச் செயலாளர் எடப்பாடியாருடைய அனுமதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
