விரைவில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்துக்குள் வருவார் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் விஜய், ஆளுநர் உரைக்கு பதிலுரை ஆற்றினார். அப்போது, ’உங்க அப்பாவை காணம்” என கூறி குட்டி ஸ்டோரி ஒன்று சொன்னார். இது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலினை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருந்தது.
அதோடு 5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர் காணாமல் போய்விட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், இன்று (ஜூன் 24) புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக விவசாயத் தொழிலாளர் அணித் துணைத் தலைவர் விராலிமலை சந்திரசேகரன் தாயார் மறைந்த பச்சையம்மாள் படத் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
இதில் முன்னாள அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது கே.என்.நேரு பேசுகையில், “நம்முடைய தலைவரைப் பார்த்துக் கேட்கிறார், ‘உங்க அப்பாவைக் காணோம்?’ என்று. வருவார், சீக்கிரமே வந்துவிடுவார் உள்ளே. அதுதான் எங்களால் சொல்ல முடியும். எவ்வளவு விரைவாக அவர் வர வேண்டுமோ, சட்டமன்றத்தில் வந்து மீண்டும் பொறுப்பேற்பார், அது உறுதி.
நேற்று வரைக்கும் கம்முனு இருந்தான் கட்சிக்காரன். நேற்று இப்படிப் பேசினாரோ அதிலிருந்து கிளம்பி உட்கார்ந்துட்டான் எல்லா ஆளுகளும்… தமிழ்நாடு முழுவதும் கட்சிக்காரன் எழுந்து உட்கார்ந்துட்டான்…” என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் விரைவில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடலாம் என தகவல்கள் வருகின்றன.
திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
