புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் ஆன பின்னும், இன்னும் புதிய ஆட்சி அமையவில்லை.
தவெகயிடம் பெரும்பான்மையோடு வருமாறு ஆளுநர் தெரிவித்துவிட்டார் .
இந்தநிலையில் இன்று சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தவெகவின் பலம் 116ஆக அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து ஆளுநர் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
