யு.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 9) கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார், ஆளுநர் பரிந்துரைப்பவரே தேடுதல் குழுவின் தலைவராகவும், யுஜிசி, பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர்களே உறுப்பினர்களாகவும் ஆக முடியும் என பல்கலைக்கழக மானிய குழு எனப்படும் யுஜிசி புதிய விதிகளை சமீபத்தில் வெளியிட்டது.
இதனால் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், யுஜிசிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
அப்போது அவர், ‘மாநில அரசின் குறிப்பாக தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்க மத்திய அரசு எல்லா முயற்சியையும் மத்திய அரசு செய்து வருகிறது. எல்லோரும் முன்னேறுவதை பிடிக்காதவர்களால் தொடர்ந்து கல்விக்கு தடுப்பணைகள் கட்டப்படுகின்றன.
பள்ளிக்கல்வியை சிதைப்பதற்காகவே புதிய தேசிய கல்விக்கொள்கையை கொண்டு வந்து திணிக்கிறார்கள். அரசு பொதுத்தேர்வு என்ற பெயரால் வடிகட்டி, வடிகட்டி அனைவரையும் கல்வியை தொடர முடியாத அளவுக்கு செய்ய போகிறார்கள். அதனை தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது.
யுஜிசியின் நடவடிக்கை, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நீட் தேர்வு மூலமாக மருத்துவ கனவை சிதைக்கும் செயலை பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு செய்து வருகிறது. எல்லா முறைகேடும் நடக்கும் நம்பர் ஒன் தேர்வாக நீட் தேர்வு உள்ளது.
எதேச்சதிகாரமான முடிவு!
இதேபோல பல்கலைக்கழகங்களை சிதைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செய்ய அமைக்கப்படும் தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என யூஜிசி விதிமுறை வகுத்துள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுப்பது, பல்கலைக்கழங்களை சிதைக்கும் காரியமாக தான் முடியும்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து மோதல் தொடர்ந்து வருகிறது. தனிச்சையாக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்குவது சரியல்ல. இவர்களாக ஒரு உத்தரவை போட்டுவிட்டு, இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யூஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது என்பது அநியாயமல்லவா? பட்டங்களை வழங்க முடியாது என்பது பகிரங்க மிரட்டல் தானே? இந்த விதிமுறை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை சிறுமைபடுத்தும் செயல்.
மாநில அரசின் பல்கலைக்கழகங்களை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பது கெடுநோக்கம் கொண்டது. சுயநலமானது.
மக்களால் தேர்தெடுக்கப்பட்டோரிடம்தான் கல்வி தொடர்பான அதிகாரம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அனைத்து மக்களுக்குமான கல்வியை முழுமையாக கொடுக்க முடியும்.
நியமன பதவிகளில் ஒரு சில ஆண்டுகளில் இருந்துவிட்டு போகக்கூடியவர்களுக்கு ஒரு மாநில மக்களின் அடிப்படை உணர்வை புரிந்து கொள்ள இயலாது. ஒன்றிய அரசு கல்வித்துறையில் எதை செய்ய வேண்டுமோ அதை செய்யவில்லை.
தன்னாட்சி பெற்ற தனியார் கல்லூரியை பாடத்திட்டம் வகுத்து பட்டமும் வழங்கலாம் என்று கூறிவிட்டு, தங்கள் சொந்த பலத்தில் மாநில அரசு வைத்திருக்கும் நூற்றாண்டு பழமைவாய்ந்த பல்கலைக்கழகங்களை அபகரிக்க எத்தனிப்பது எதேச்சதிகாரமானது.
அதிமுக, பாமக ஆதரவு… பாஜக வெளிநடப்பு!
கல்வியும், மக்களையும் காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அதன்படி யுஜிசியின் புதிய விதிகள் மாநில உரிமைகளுக்கு எதிரானது. எனவே இவற்றை யுஜிசி திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழக அரசின் இந்த தீர்மானத்தைப் பார்த்து ஒன்றிய அரசு தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் யூஜிசியின் இந்த புதிய விதிமுறைகளுக்கு எதிராக மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம்” என்று ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தை கண்டித்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த யூஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
திருந்தாத கேரளா : குப்பை கழிவுகளை தமிழகத்துக்கு கொண்டு வந்த ‘நண்பேண்டா’வுடன் தமிழர்கள் கைது!
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்