குதிரை வேகத்தில் குதிரை பேரம் நடப்பதாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதில் காங்கிரஸுக்கு 2, ஐயுஎம்எல் 1,விசிகவுக்கு 1 அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் தரப்பை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இந்தசூழலில் தவெகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், “‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து ரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
