41-ஆம் திருமண நாளில் மறைந்த மனைவியை நினைவுகூர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தனது எக்ஸ் பக்கத்தியில் பதிவொன்றை இட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மனைவி கிரேஸ் ஜெயந்தி ராணி கடந்த 2023 செப்டம்பர் மாதம் இயற்கை எய்தினார். நேற்று (ஆகஸ்ட் 22) இவர்களது திருமண நாள்.
இந்நாளை நினைவு கூர்ந்து ஜேசிடி பிரபாகர் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”41 ஆண்டுகள்… ஒரு திருமண வாழ்க்கையின் நினைவுகள் மட்டுமல்ல; என் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் என்னுடன் பயணிக்கும் அன்பின் நினைவுகள்.
கண்ணின் இமை போல என்னைக் காத்து, அன்பிலும் அக்கறையிலும், ஆலோசனைகளிலும், வழிகாட்டுதலிலும் என்னை அரவணைத்த என் வாழ்க்கைத் துணையை, இந்த 41-ஆம் திருமண நாளில் நெஞ்சம் நிறைந்த அன்புடன் நினைவுகூர்கிறேன்.
என் இன்பத்திலும் துன்பத்திலும், வெற்றியிலும் சோதனைகளிலும் என்னுடன் நின்ற அந்த அன்பும் அரவணைப்பும் என் வாழ்வின் மிகப் பெரிய வரம்.
காலம் கடந்தாலும் சில உறவுகள் மறைவதில்லை…
அவை நினைவுகளாக மட்டும் இல்லாமல், நம் வாழ்வின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வாழ்கின்றன.

இன்று அவர் என்னுடன் இல்லை…
ஆனால், அவர் தந்த அன்பும், அவர் விட்டுச் சென்ற நினைவுகளும் என் ஒவ்வொரு நாளிலும் என்னுடன் இருக்கின்றன.
41 ஆண்டுகள் கடந்தாலும்,
உன்னை நினைக்கும் அன்பும் நன்றியும் என்றும் மாறாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
