”நாங்க வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா?” சிபிஎம் கேள்வி- விஜய் அரசுக்கு நெருக்கடி!

Published On:

| By Mathi

CPIM Stages Statewide Protests Denouncing Vijay Govt Action Against Left Parties

தமிழ்நாட்டில் சிபிஐ, சிபிஎம், காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டங்களில் பங்கேற்க தடை விதித்த சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் இன்று சிபிஎம் கட்சியினர் கண்டனப் போராட்டம் நடத்தினர்.

மாணவர் போராட்டங்களுக்கு தடை விதித்தது மற்றும் குஜிலியம்பாறையில் சிபிஐ, சிபிஎம் உறுப்பினர் விவரங்கள் சேகரிக்கப்பட்ட சர்ச்சை ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் சிபிஎம் கட்சியினர் இன்று ஆகஸ்ட் 22-ந் தேதி போராட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த அரசாங்கம் ஆட்சியில் அமைவதற்கு ஆட்சியில் தொடர்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்திருக்கிறது. இது தெரியாதவரா தலைமைச் செயலாளர்? இதை தெரியாதவரா வட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர்?

ADVERTISEMENT

இடதுசாரிகளுடைய ஆதரவோடுதான் இந்த அரசு ஈடுகிறது என்று தெரிந்ததற்கு பிறகும், இடதுசாரிகள் மீது உள்நோக்கத்தோடு இத்தகைய அறிக்கைகள் எல்லாம் அனுப்பப்படுகிறது, சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது என்று சொன்னால், அவர்களை வைத்துக்கொண்டு நீங்கள் ஆட்சி நடத்தப் போகிறீர்களா? இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா?

இதுதான் அடிப்படையான கேள்வி. ஆகவே இந்த நடவடிக்கைகளை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. இதற்கு ஒரு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையிலேயும், இந்த பிரச்சனை சுமுகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது சம்பந்தமாக விவாதம் நடைபெற்றபோது, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்த பதில் என்பது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல. அது நடந்த சம்பவத்தை மூடி மறைக்கக்கூடிய வகையிலே தான் உயர்கல்வித்துறை அமைச்சருடைய பதில் என்பது இருக்கிறது.

ஏதோ சில வார்த்தைகள் சில அமைப்புகள் சம்பந்தமாக தவறுதலாக அதிலே குறிப்பிடப்பட்டுவிட்டது என்ற முறையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

உண்மையில் தவறுதலாகத்தான் குறிக்கப்பட்டது என்று சொன்னால், அந்த தவறுக்கு யார் காரணமோ அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட எந்த உறுதிமொழியையும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவிக்கவில்லை.

இரண்டாவது, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்த வட்டத்திற்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய உறுப்பினர்கள் சம்பந்தமான விவரங்களை எல்லாம் 24 மணி நேரத்திற்குள் விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும் என்கிற மிக அவசரமான உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

இப்ப 24 மணி நேரத்திலேயும் அந்த விவரத்தை எல்லாம் கேட்டு அவர் என்ன கிழிக்கப் போறாருன்னு நான் கேட்க விரும்புகிறேன். அவர் என்ன செய்யப் போறாரு வட்டாட்சியர்?

இது சம்பந்தமாக சட்டப்பேரவையில் விவாதம் நடந்தபோது, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன், நாங்க அவரை ஒரு சர்வே எடுப்பதற்காக அனுப்பினோம் என்றார். ஆனால் என்ன சர்வேன்னு சொல்லல.

ஒருவேளை கம்யூனிஸ்டுகள் சம்பந்தமான சர்வே எடுப்பதற்காகத்தான் தமிழ்நாடு அரசின் சார்பில் அவர் சென்னையிலிருந்து குஜிலியம்பாறைக்கு அனுப்பப்பட்டாரா என்கிற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.

ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் என்ன சொல்றாருன்னா அவர் ஒரு ட்ரெய்னிங்காக வந்தாரு. ட்ரெய்னிங் முடிஞ்சது, அதனால நாங்க வந்து திரும்ப சென்னைக்கு அனுப்புறோம். என்ன ட்ரெய்னிங் கொடுத்தீங்க? சட்டத்திற்கு விரோதமாக கம்யூனிஸ்டுகள் சம்பந்தமாக கணக்கெடுக்கிறதுக்கு தான் அங்க ட்ரெய்னிங் கொடுக்கப்பட்டதா?

அமைச்சர் சொல்றது உண்மையா? மாவட்ட ஆட்சித் தலைவர் சொல்றது உண்மையா என்பதை முதல்ல தமிழ்நாடு அரசாங்கம் தெளிவுபடுத்துங்க. சர்வே எடுப்பதற்காகத்தான் அனுப்பினீங்க… எப்படியிருப்பினும் அது அரசாங்கமே சொல்லி செய்திருந்தாலும் அல்லது தன்னிச்சையாக வட்டாட்சியர் அத்தகைய சர்வே எடுப்பது என்கிற முடிவை எடுத்திருந்தாலும் அது சட்டவிரோதமானதும் கடும் கண்டனத்திற்குரியது ஆகும்.

ஆகவே இதற்கு காரணமான வட்டாட்சியர், உடனே வட்டாட்சியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குஜிலியம்பாறையிலிருந்து சென்னைக்கு அனுப்புறது, சென்னையிலிருந்து குஜிலியம்பாறைக்கு அனுப்புறதுலாம் நடவடிக்கை லிஸ்ட்ல வராது. இந்த மாதிரியான நடவடிக்கை எல்லாம் ஏத்துக்கிறது இல்லை.

ஆகவே இந்த இந்த மாதிரியான இடமாறுதல் செய்யப்பட்டது ஆகப்பெரிய நடவடிக்கை என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தரப்பில் முயற்சிப்பது என்பது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல.

ஆகவே வட்டாட்சியர் மீதும் இந்த மாதிரியான சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கூட்டத்திற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கணும்.

இந்த அதிகாரிகள் எல்லாம் தமிழ்நாடு அரசாங்கத்தினுடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்களா? அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசாங்கம் இருக்கிறதா என்கிற கேள்வியைத்தான் இந்த இரண்டு சம்பவங்களும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் விவாதப் பொருளாக ஆக்கியிருக்கிறது. ஆகவே இதை சரி செய்யக்கூடிய வகையில் தவறு நிகழ்ந்துவிட்டது.

இதை நாங்கள் சரி செய்கிறோம் என்கிற முறையில் அரசின் அணுகுமுறை இருக்க வேண்டுமே தவிர, மூடி மறைக்கக்கூடிய வகையில் இருப்பது என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

ஆகவே தமிழ்நாடு அரசாங்கத்தினுடைய தலைமைச் செயலாளர், ரெண்டு நாளுக்கு முன்னே நான்கு நாளுக்கு முன்னாடி தான் இந்தியாவினுடைய பிரதமர், அர்பன் நக்ஸல் என்று சொல்லி அவர்களை அவர்களெல்லாம் இனிமேல் அறிவிக்கப்படுவார்கள் என்கிற முறையில் அவர் சொல்றாரு. அடுத்த ரெண்டு நாளிலே தலைமைச் செயலாளர் இப்படி ஒரு உத்தரவை போடுகிறார்.

அதற்கு ரெண்டு நாளில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் வந்து கணக்கெடுக்க நடத்துறாரு. இது எல்லாத்தையும் இணைத்து பார்த்தால், ஏதோ மத்திய அரசும் மாநில அரசும் திட்டமிட்டு இத்தகைய சதி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்கிற சந்தேகத்தையும் விவாதத்தையும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு இருக்கிறது.

ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு தவறு நிகழ்ந்துவிட்டது நாங்கள் உரிய நடவடிக்கையும் எடுக்கிறோம் என்கிற செய்தியை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிக்கக்கூடிய வகையில் தலைமைச் செயலாளர் அந்த பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

அவர் ஏற்கனவே பதவி நீட்டிப்பில் தான் இருக்காரு. அவர் ஆல்ரெடி ஓய்வு பெற்றுவிட்டு விட்டார். தேர்தல் ஆணையத்தின் மூலமாகத்தான் அவர் இங்கே வந்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் கேட்டு அவர் இங்கே வரவில்லை. தேர்தல் ஆணையத்தின் மூலமாகத்தான் அவர் இங்கே நியமனம் செய்யப்பட்டார்.

அவருடைய பதவி காலம் என்பது முடிந்துவிட்டது. இங்கே திறமை வாய்ந்த பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பை கொடுத்திருக்க முடியும். சிறந்த நிர்வாகத்தை அவர்கள் நடத்தி இருப்பார்கள். திறமை வாய்ந்த பல அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறபோது ஏற்கனவே பதவி காலம் முடிந்த ஒரு அதிகாரியை எதற்காக பதவி நீட்டிப்பு கொடுக்க வேண்டும்?

ஆகவே அவர் இப்போது இருப்பது என்பது சட்டவிரோதமானது. ஆகவே உடனடியாக அவரை அந்த பொறுப்பிலிருந்து நீக்குவதன் மூலமாக ஏற்பட்டிருக்கிற இந்த எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தமிழ்நாடு அரசாங்கம் தீர்வு காண்பதற்கு தயாராக இருக்கிறது என்கிற செய்தியை தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற சு.வெங்கடேசன் எம்.பி. பேசியதாவது: ஆகஸ்ட் 14ஆம் தேதி உயர்கல்வி துறை சுற்றறிக்கையை கல்லூரி கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்புகிறது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 17ஆம் தேதி கல்லூரி கல்வி இயக்குநரகம் அந்த சுற்றறிக்கையை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்புகிறது.

எனவே இந்த சுற்றறிக்கையினுடைய பின்னணி, இது முழுக்க முழுக்க டெல்லி பல்கலைக்கழகம் விடுத்த சுற்றறிக்கை. அதற்கு காரணம் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இவற்றின் பின்னணியில் கொடுக்கப்பட்ட ஒரு சுற்றறிக்கை, தமிழ்நாட்டரசின் தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கையாக எப்படி மாறியது? இதுதான் மிக முக்கியமான கேள்வி. எனவே இதற்கு பதில் சொல்ல வேண்டியவர், இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது தமிழ்நாட்டினுடைய தலைமைச் செயலாளர் மீது.

இன்னும் சொல்லப்போனால், டெல்லி பல்கலைக்கழகங்களின் சுற்றறிக்கையாவது பொதுவாக மாணவர்கள் போராடுகிறவர்கள் என்று மட்டுமிருந்தது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரினுடைய சுற்றறிக்கையில், குறிப்பாக இடதுசாரி கட்சிகள், சி.ஜே.பி. கட்சி என்று இருக்கிறது. இடதுசாரி கட்சிகள் நடத்துகிற போராட்டத்தில் மாணவர்களை பங்கேற்கச் சொல்ல தடை விதிக்கிற அதிகாரம் யாருக்கு இருக்கிறது? இடதுசாரி கட்சிகள் என்ன தடை செய்யப்பட்ட கட்சிகளா?

சரி இடதுசாரி கட்சியினுடைய மாணவர்கள் போராட்டத்திற்கு போகக்கூடாது, ஏபிவிபிக்கு போகலாமா? பிஜேபியின் மாணவர் அமைப்புக்கு போகலாமா? திமுக, அதிமுக, டிவிகே மாணவர் அமைப்புக்கு போகலாமா? இது என்ன சுற்றறிக்கை? எவ்வளவு ஜனநாயக விரோதமான ஒரு சுற்றறிக்கை!

எனவே இந்த சுற்றறிக்கையை வெளியிட்ட, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்த பிரச்சனையிலே தலையிட்டு, இதன்பால் தமிழக அரசினுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும், தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நாங்கள் கேட்டுக்கொள்வது இது ஒரு வெளிப்படையான ஆதாரம். மோடி அமித்ஷாவின் உத்தரவு டெல்லி பல்கலைக்கழகங்களின் உத்தரவாக மாறுகிறது, அது புரிந்து கொள்ள முடிகிறது. அதை எதிர்த்து மகத்தான போராட்டத்தை இந்தியாவில் நாம் நடத்தியிருக்கிறோம். மோடி அமித்ஷாவின் உத்தரவு டெல்லி பல்கலைக்கழகங்கள் உத்தரவாக மாறுவதை புரிந்து கொள்ள முடியுமானால், டெல்லி பல்கலைக்கழகத்தின் உத்தரவு தமிழ்நாடு அரசின் உத்தரவாக எப்படி மாறியது?

அந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் நடத்திய கூட்டம். ஆனால் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். எனவே இந்த உத்தரவின் மீது உடனடியாக நடவடிக்கை வேண்டும். இந்த உத்தரவு சட்டவிரோதமானது, கொள்கை விரோதமானது, இதன் மீது உடனடியாக நடவடிக்கையை தமிழக முதல்வர் அவர்கள் எடுக்க வேண்டும். மோடி அமித்ஷாவின் உத்தரவை அமல்படுத்துகிற கறுப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஆதரவு, இந்த ஆர்டர் என்பது தலைமைச் செயலாளர் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா? இந்தியாவின் உள்துறை அமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா? என்ற கேள்வியில் வந்து நிற்கிறது. ஏனா இந்த இந்த உத்தரவில் இருக்கிற வாசகம் அப்படியே டெல்லி பல்கலைக்கழக உத்தரவில் இருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தின் உத்தரவு நேரடியாக உள்துறை அமைச்சரின் உத்தரவு. அது எப்படி இங்கு அமலாச்சு?

சரி தலைமைச் செயலாளர் கூட்டத்தை கூட்டிட்டாரு. அந்த உத்தரவு ஹோம் செக்ரட்டரி உத்தரவா மாறுது. அந்த உத்தரவு ஹையர் எஜுகேஷன் செக்ரட்டரி உத்தரவா மாறுது. அந்த உத்தரவு காலேஜ் எஜுகேஷன் கவர்னருடைய உத்தரவா மாறுது. எந்த அமைச்சரும் தலையிடலையா?

உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் விஸ்வநாதன் அவர்கள் இந்த உத்தரவைக் கிழித்து எறிகிற முதல் நபராக இருந்திருக்கணும். ஏனென்றால், டெல்லி பல்கலைக்கழக உத்தரவுக்கு எதிராக வலிமையாக குரல் கொடுத்தவர் மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள். இந்த உத்தரவை கிழித்து போடுன்னு சொல்லியிருக்கிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக இந்த உத்தரவை கிழித்தெறிய வேண்டும், இந்த உத்தரவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி முதல்வரிடமும், அரசிடமும் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலாளர் இந்த உத்தரவுக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த உத்தரவுக்கு பொறுப்பேற்கும் வரை இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வரை மார்க்சிஸ்ட் கட்சி இந்த போராட்டத்தை கைவிடாது. இது நேரடியாக இடதுசாரிகளின் மீது ஏவப்பட்டிருக்கிற ஒரு தாக்குதல். இப்படி ஒரு உத்தரவை இதுவரை தமிழ்நாட்டினுடைய வரலாற்றில் யாரும் போட்டது கிடையாது. இந்த உத்தரவை போடுகிற துணிச்சல் தலைமைச் செயலாளருக்கு எங்கிருந்து வருகிறது? கவர்னர் ஆபீஸ்லிருந்து வருகிறதா? இல்ல ஹோம் செக்ரட்டரி கிட்ட இருந்து வருதா? இது தெரியணும். எனவே இந்த உத்தரவின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலை. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share