தனக்கும் உதயநிதிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.
திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷும் இருந்தனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அன்பில் மகேஷ் வெற்றி பெறவில்லை. உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
இந்தசூழலில் உதயநிதிக்கும் அன்பில் மகேஷுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருப்பதாகவும், மூன்று தலைமுறை நட்பு முடிவுக்கு வரவிருப்பதாகவும் சில யூடியூப் சேனல்களில் செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 22) சென்னையில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.
அதில், ”இன்றைக்கு டேக் டைவர்சன் அரசியலைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். பொய்யை சொல்லும் வேலையைத்தான் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்கள். ஒரு உண்மையை நிரூபிப்பதற்கு நாம் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.
இடையில் எனக்கும் உதயநிதிக்கும் இடையே சண்டை என கூறுகிறார்கள். மூன்று மாதங்களாக என்ன நடக்கிறது என்று கேள்வி கேட்டால்… மூன்று தலைமுறை நட்பு முடிவுக்கு வரப்போகிறது . உடைந்தது… பிரிந்தது… என்று பேசுகிறார்கள். அதை ஒன்றரை லட்சம் பேர் பார்க்கிறார்கள். அந்த ஒன்றரை லட்சம் பேரில் நானும் உதயாவும் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அதை பார்த்துவிட்டு உதயா என்ன என்று கேட்டார். நான் சொன்னேன்… Welcome to New Tamil Nadu, the place is for only reels என்றேன்.
இதுபோல பொய்யை பரப்பி டேக் டைவர்சன் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
