Snake Bite: தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது, “பாம்பு கடி சிகிச்சை” பற்றி அமைச்சர் அருண்ராஜ் விரிவாக பதிலளித்தார். அப்போது, “நாகதோஷம், பரிகாரம்” பற்றி முன்னாள் முதல்வரான் திமுகவின் ஓ.பன்னீர்செல்வம் பேசிய பேச்சு சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சட்டசபையில் இன்று (செப்டம்பர் 2) ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: கேள்வி நேரம் ஆரம்பிக்கப்பட்டு 29 நிமிடங்களாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாம்பு கடி சிகிச்சை பற்றிய உரிய விளக்கத்தைத் தந்து கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு நான் அறிந்தது, பல்வேறு தொகுதிகளில் பாம்பு கடி இருப்பதாக அறிய முடிகிறது. ஆக அந்தத் தொகுதியெல்லாம் தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். அதனால் நாக தோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனைகள் இருந்தால், அதை நடத்தி காட்ட வேண்டும்.
சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ்: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அறிவியல் பூர்வமான அரசு. அதனால் தோஷம், பில்லி, சூனியத்தில் நம்பிக்கை இல்லை. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்கள் உங்களுடைய தொகுதிக்கு அந்த தோஷ நிவர்த்தியை மேற்கொள்ளலாம். மாநில அளவில் அறிவியல் பூர்வமான முயற்சிகள் மட்டும் தான் நாம் எடுப்போம். ஜலதோஷம் தான் அதிகம் இருக்கு.
ஓ.பன்னீர்செல்வம்: அமைச்சர்கள் விரும்பினால், இந்த தோஷங்கள் நீக்க உரிய ஆட்களை அனுப்பி வைக்கிறோம்.
அமைச்சர் அருண்ராஜ்: எங்களுக்கு தோஷத்தில் நம்பிக்கையும் இல்லை, விருப்பமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: பெரியாரைப் பேசிய திமுக இன்று, தோஷத்தைப் பற்றி பேசிட்டு இருக்காங்க. நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள், அறிவியல் பூர்வமாக, இந்தப் பிரச்சனையை அணுகக்கூடியவர்கள் என்பதைப் பதிவு செய்கிறோம்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் கேட்டது உண்மையாவே ஜலதோஷத்தைப் பற்றித்தான். எங்களுடைய துணைத் தலைவருக்கு (கே.என்.நேரு) உண்மையாகவே ஜலதோஷம், கடந்த சில நாட்களாக அவருக்கு உடம்பு சரியில்லை. அதற்கும் ஒரு தீர்வு காண வேண்டும் என்றுதான் அவர் கேட்டார்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: ஓ.பன்னீர்செல்வம் சொன்னதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறோம்.
