இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கி வரும் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று (ஜூன் 3) அதிகாலை ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு விபத்தில், படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் அஜித்தின் ‘வாலி’, விஜய் நடித்த ‘குஷி’ போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கில்லர்’ என்ற திரைப்படத்தை இயக்கி, நடித்து வருகிறார். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் ஏஞ்சல் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், பேன் இந்தியா திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சி ஒன்றை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக சிலிண்டரில் வாயு நிரப்பப்பட்ட போது, எதிர்பாராத விதமாக சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
ஒருவர் உயிரிழப்பு
இந்த கொடூர விபத்தில் மதன் என்பவர் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாகவும், மேலும், படுகாயமடைந்த மற்ற 3 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விபத்துக்கான முதற்கட்ட காரணங்கள் குறித்தும், அங்கு பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த இந்த சோக சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் திரைத்துறையினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
