நடிகரும் கார் ரேசருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (மே 30) காலமானார்.
மோகினி மணியின் இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும் என்று அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் விஜய்
அருமை நண்பர் அஜித் குமார் தாயார் மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின்
அன்புச் சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரை தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமார், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
பாமக தலைவர் அன்புமணி
தாய் மீது நடிகர் அஜித்குமார் கொண்டிருந்த அன்பை நான் அறிவேன். உலகில் எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்பது தாயாரின் மறைவு தான்.
அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி திரைக்கலைஞர் அன்புச்சகோதரர் அஜித்குமார் தாயார் அம்மா மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத் தாயாரின் மறைவால் ஈடுசெய்யவியலாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அன்புச்சகோதரருக்கு இத்துயரிலிருந்து மீண்டுவர துணைநிற்கிறேன்.
அம்மா மோகினி மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்.
சிபிஐ மாநில செயலாளர் மூ.வீரபாண்டியன்
நடிகர் அஜித் குமாரின் தாயார் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் தருகிறது. அவரது மறைவுச் செய்தி திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரைப் பிரிந்து வாடும் நடிகர் அஜித் குமார், அவரது வாழ்க்கை இணையர் நடிகர் ஷாலினி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை
அஜித்குமார் தாயார் மோகினிமணி அம்மாள் இயற்கை ஏய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். ஒரு குடும்பத்தின் ஆணிவேராக திகழும் தாயின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
எளிமையும் அன்பும் நிறைந்த தாயாரை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
இன்றைய தினம் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!
