வகுப்புவாத சக்திகளை நாம் தனிமைப்படுத்த வேண்டியது அரசியலில் நமது முதற்கடமை என்று மூ.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
பாஜகவை எதிர்க்கப் போகும் அணியில் திமுகவும், தவெகவும் இணைய வேண்டும் என்று திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தார். இதுத்தொடர்பாக தவெக தோழமை கட்சியான காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், ”கேரளாவில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுகளும் நாங்களும் சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் டெல்லியில் ஒரே மேஜையில் உட்கார்ந்து பா.ஜ.க.வைக் கொள்கை அளவில் எதிர்ப்பதில் தெளிவாக உள்ளோம். அந்த நிலைக் குறித்து அண்ணன் திருமா பேசுகிறார். தமிழகத்தைப் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அதிகாரம் இல்லாத மாநிலமாகக் கொண்டு வர திருமாவளவன் நினைக்கிறார்” என்று கூறியிருந்தார்.
இந்தசூழலில் இன்று (ஜூலை 11) தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மூ.வீரபாண்டியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ”ஜனநாயக சக்திகள் அனைத்தும் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போரிட வேண்டும். அதான் எங்களுடைய நிலைப்பாடு.
இந்தியா ஒரு பன்முக நாடு. பன்முகத்தின் அடித்தளம் மதச்சார்பின்மை. இந்த அரசியல் உலகில் வேறெந்த நாட்டிலும் நிலவாத அரசியல் விழுமியங்களை பாதுகாப்பதுதான் நமது முதற்கடமை.
எனவே, மத அடிப்படைவாத சக்திகளை தனிமைப்படுத்த, முறியடிக்க ஜனநாயக சக்திகள் யாவும் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் வேண்டுகோள் கூட.
எனவே அந்த வகையில் ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு வகுப்புவாத பேரபாயத்தை தடுக்க வேண்டும். கட்சிகள் ஒன்றுக்கு ஒன்றை எதிர்ப்பது, போட்டியிடுவது, வெற்றி பெறுவது, தோல்வி அடைவது இயல்பு.
ஆனால் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை சிதைக்கிற வகுப்புவாத சக்திகளை நாம் தனிமைப்படுத்த வேண்டியது அரசியலில் நமது முதற்கடமை என்று நான் கருதுகிறேன்” என்று கூறினார்.
