சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 84 வயதான கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டார்.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சமூக ஆர்வலர் ஒருவர், சென்னை பெருநகர காவல் துறையின் கீழ் இயங்கும் ஒரு சிறப்பு பிரிவான ITPU-ல் (immoral trafficking prevention unit – பாலியல் குற்றங்கள் மற்றும் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு) ஒரு பாலியல் புகார் அளித்தார். அதற்கு ஆதாரமாக ஒரு பென் டிரைவையும் சமர்ப்பித்தார்.
அதில் பதிவாகி இருந்த வீடியோவில், முதியவர் ஒருவர் சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை செய்வது பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக விசாரணை செய்த போலீசார் அந்த வீடியோவில் இருந்த முதியவர் பிரபல தொழிலதிபரான ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர். வீரமணி என்பதை கண்டறிந்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த வீரமணி, அந்த வீட்டை அவரது கூட்டாளிகளான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரின் பொறுப்பில் விட்டுள்ளார். தொடர்ந்து அந்த வீட்டில் வைத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அப்படி ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோதுதான் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து வீரமணியின் வீடு அலுவலகம் உட்பட அவருக்கு தொடர்புடைய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வீரமணியை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் 2025 அக்டோபர் மாதம் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம் என்பதை கண்டறிய காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
