திண்டுக்கல் மாவட்டத்தில் FQL Exchange மற்றும் VG Investment ஆகிய போலி செயலிகள் 15,000 பேரிடம் ரூ.30 கோடி மோசடி செய்த விவகாரத்தில் 3 ஏஜெண்டுகளை கைது செய்துள்ளதாக திண்டுக்கல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திண்டுக்கல் போலீசார் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம் நத்தம், காசம்பட்டி, விளாம்பட்டி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் FQL Exchange மற்றும் VG Investment ஆகிய போலி செயலிகள் மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் தொகையை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி சுமார் 15,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மற்றும் விவசாய பொதுமக்களிடம் இருந்து ரூ. 30 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது.
நத்தம் காவல் நிலையச் சுங்கம் காசம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இப்புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குமரேசன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் வழக்கில் தொடர்புடைய முக்கிய எதிரிகளான நத்தம் காசம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி அனிதா மற்றும் விஜய் ஆகிய 3 பேரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள தீனதயாளன், பிரியதர்ஷினி, ரஞ்சித் மற்றும் அருண் ஆகியோரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை
- போலி வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: எந்தவொரு சட்டபூர்வ நிதி நிறுவனமும் குறுகிய காலத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியாது. அதிக வட்டி மற்றும் குறுகிய கால இரட்டிப்பு வாக்குறுதிகளை அளிக்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
- Play Store அல்லது அதிகாரப்பூர்வ நிதி நிறுவன அங்கீகாரம் இல்லாத APK லிங்க்குகள் (APK Files) மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் போலி செயலிகளில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
- பொதுமக்கள் இதுபோன்ற நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தையோ, மாவட்ட குற்றப்பிரிவு (DCB) அலுவலகத்தையோ அல்லது சைபர் குற்ற உதவி எண்ணான 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
