தமிழக முதல்வர் விஜய் இன்று (மே 11) மாலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக முதல்வராக விஜய் நேற்று பொறுப்பேற்றார். இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரை சந்தித்தார்.
இவர்களைத் தொடர்ந்து மாலை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு சென்றார்.
விஜய் வருகைக்காக சீமான் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார். கார் வந்து நின்றதும், கீழே இறங்கிய முதலமைச்சர் விஜய்யை, சீமான் பாசத்தோடு “வா தம்பி” என அழைத்து வாரி அணைத்துக்கொண்டார்.
பின்னர் இருவரும் பரஸ்பரமாக பொன்னாடை அணிவித்து மரியாதை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து சீமான் பழக்கூடை கொடுத்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும், மக்கள் நலனுக்கும் நாம் தமிழர் கட்சி எப்போதும் ஆக்கப்பூர்வமான ஆதரவை வழங்கும் என்று சீமான் இச்சந்திப்பின் போது உறுதி அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த போதும், சீமான் விஜய்யின் கைகளைப் பிடித்துக்கொண்டே கார் வரை நடந்து வந்தார்.
கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து இருவரும் புன்னகையோடு கைகளை அசைத்தனர். பின்னர், விஜய் காரில் ஏறும் வரை உடனிருந்து, அவருக்கு வணக்கம் கூறி சீமான் வழியனுப்பி வைத்தார்.
