நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான், டிஐஜி வருண்குமார் ஆகியோர் இன்று (ஏப்ரல் 8) திருச்சி ஜே.எம்.4 நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். seeman dig varukumar appear in court
திருச்சி சரக டிஐஜி வருண்குமார், திருச்சி எஸ்.பியாக இருந்தபோது அவரது வீட்டு பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுப்பதாக திருச்சி மாநகர தில்லை நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது மிரட்டல் விடுப்பது, அவமதிப்பது, அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை பதிவிடுவது, தகவல் தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு திருச்சி ஜே.எம்.4 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று சீமான் ஆஜராக மாஜிஸ்திரேட் விஜயா உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் அஜராகவில்லை.
இதையடுத்து மாஜிஸ்திரேட் விஜயா, ‘மாலை, 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்’ என, அறிவித்தார். ஆனாலும் மாலை வரை சீமான் நீதிமன்றத்துக்கு வரவில்லை.
அவரது சார்பில், சீமான், சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருப்பதால் வரமுடியவில்லை. ஒரு நாள் அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்ற மாஜிஸ்திரேட் விஜயா இன்று (ஏப்ரல் 8) ஆஜராக உத்தரவிட்டார்.
இந்தநிலையில் சீமான் மீது வழக்கு போட்ட டிஐஜி வருண்குமார் காலை 10.47 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து சீமான் நீதிமன்றத்துக்கு வருகைத் தந்தார்.
நீதிமன்றத்துக்கு வெளியே டிஐஜி வருண் குமாரும், சீமானும் அருகருகே நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது வருண்குமாரும் அவரது வழக்கறிஞர்களும் நீதிமன்றம் பக்கமாக தள்ளி போய் நின்றனர்.
இதைபார்த்த சீமானும் அவரது ஆதரவாளர்களும் தங்களையும் மாஜிஸ்திரேட் அழைக்கிறார் என்று நினைத்து உள்ளே சென்றனர்.
அப்போது சீமானை பார்த்து மாஜிஸ்திரேட் நான் அழைக்கவில்லை, கூப்பிடாமல் உள்ளே ஏன் வந்தீர்கள் என்று கேட்க, மீண்டும் சீமானும் அவரது ஆதரவாளர்களும் வெளியே வந்து நின்றனர்.
இதையடுத்து 11 மணிக்கு மேல் இரு தரப்பையும் மாஜிஸ்திரேட் அழைத்தார். அப்போது வழக்குத் தொடர்பான ஆவண நகல்கள் சீமானிடம் வழங்க உத்தரவிட்ட மாஜிஸ்திரேட் விஜயா வழக்கை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.